"இலங்கை தமிழர்களை பற்றி சிந்திப்பது சிறந்தது"


இலங்கை தமிழர்களை பற்றி தமிழக தலைவர்கள் சிந்திப்பது நல்லது என, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் பரபரப்பான சூழலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று பதவியேற்ற அவர், சிங்களர்களின் வாக்குளால்தான் வெற்றி பெற்றதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், தமிழர்கள் வசிக்கும் கேகல்லே மாவட்டத்தின் எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டத்திற்குள் நுழைந்த கும்பல், தமிழர்களின் வீடுகளை சேதப்படுத்தியது.  அங்கிருந்த பெண்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய அதிபர் உள்பட தங்களது எதிர்கால அரசானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசியல் தலைவர்கள், இலங்கை அதிபர் மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டுவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை  தமிழர்களை பற்றி சிந்திப்பது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.