’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா?


#BBC.(கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)
இலங்கைத் தீவின் ஏழாவது அரசுத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிராஜ் மஷூர் இலங்கைத்தீவு இப்பொழுதும் இனரீதியாக பிளவுபட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

சிராஜ் மஷூர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர். நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாவது தரப்பாகிய ஜே.வி.பி.யோடு கூட்டுச் சேர்ந்த அமைப்பு இது.

தேர்தல் முடிவுகளை இலங்கைத் தீவின் வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் இந்த இனரீதியான பிளவு தெரியவரும். ஒப்பீட்டளவில் வாக்களிப்பு வீதம் முன்னைய தேர்தலை விட அதிகமாக இருக்கும் பகுதிகளை நிறம்தீட்டினால் அது தமிழ் மக்களால் தாயகம் என்று அழைக்கப்படும் பகுதியாகவே காணப்படும். அதுபோலவே சஜித் பிரேமதாசவுக்கு அதிகமாக வாக்களித்தவர்கள் யார் என்று பார்த்தாலும் அதுவும் பெரும்பாலும் தமிழ்ப் பகுதிகளாகவே இருக்கும்.

அதேசமயம் கோட்டாபாய ராஜபக்ஷவை யார் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது பெருமளவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளாகவே இருக்கும். அதாவது இலங்கைத் தீவின் ஏழாவது ஜனாதிபதியை பெருமளவுக்கு தனி சிங்கள வாக்குகளே தீர்மானித்திருக்கின்றன. அந்த ஜனாதிபதியை பெருமளவுக்கு சிறுபான்மை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

அச்சுறுத்திய வெள்ளை வேன் சாட்சியங்கள்
தமிழ்ப் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தமைக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமாக வாக்களிக்கப்பட்டமைக்கும் காரணம் என்ன?

காரணம் மிகவும் எளிமையானது. தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க விரும்புகிறார்கள். அதோடு கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த சிறிய ஜனநாயக வெளியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒரு காரணம். தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் அரசாங்கத்தின் ஓர் அமைச்சராகிய ராஜித சேனாரட்ன ஓர் ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்தார்.

வெள்ளை வேனில் வந்து ஆட்களை கடத்திச் சென்றது கோட்டாபயவின் உத்தரவின் பேரிலேயே என்று நிரூபிக்கும் சாட்சிகளை அதில் பேசவைத்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு சிங்கள மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்கள் மத்தியில் பயத்தைக் கூட்டியது. இதுபோன்ற பல பயங்கள் சேர்ந்துதான் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குகளாக விழுந்தன.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
கோட்டாபய மற்றும் மஹிந்த (கோப்புப் படம்)
எனவே தமிழ்ப் பகுதிகளில் சஜித்துக்கு விழுந்த வாக்குகளை அவருடைய கொள்கைக்கு விழுந்த வாக்குகளாகவோ அல்லது அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்புக்கு விழுந்த வாக்குகளாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை கோட்டாபயவுக்கு எதிரானவை. ஆகக் குறைந்தது உயிர் வாழ்வதற்கான அற்ப ஜனநாயக வெளிக்காகப் போடப்பட்டவை.

"ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை"

"தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக்குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்துப் பேசுவது 'பெரிய தீமைக்கு' வழிகோலிவிடும் என்றும் தென்னிலங்கை தாராளவாத முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது" என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை தமிழ்ப் பகுதிகளில் கோட்டாபயவோடு இணைந்து நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான் போன்ற தமிழ் அரசியல் வாதிகளின் வாக்கு வங்கியும் சரிந்திருக்கிறது. தேர்தலில் தமிழ் மக்கள் அதிகபட்சம் இன ரீதியாக சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை அது காட்டுகிறது.

'நல்லாட்சி'யின் இயலாமையும், ஈஸ்டர் குண்டும்
சிங்கள மக்களும் அப்படித்தான். இனிமேல் ஓர் அரசுத் தலைவரை தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை இல்லை என்பதனை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகளே பெருமளவுக்கு மஹிந்தவை தோற்கடித்தன.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
சஜித் பிரேமதாஸ
அதன்பின் இனி எப்பொழுதும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று முடிவெடுத்து ராஜபக்ஷ அணி கடுமையாக உழைத்தது. "நல்லாட்சி" அரசாங்கத்தின் இயலாமைகளும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பும் அவர்களுக்கு சாதகமாக நிலைமைகளைத் திருப்பியது. நாட்டுக்கு ஓர் இரும்பு மனிதன் தேவை என்ற உணர்வை அது சிங்கள மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியது.

ஹிட்லர் போன்ற எதேச்சதிகாரி தேவை என்று சொன்ன பௌத்த பிட்சு
ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவான அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் அதே தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டுக்கு ஹிட்லரை போன்ற ஓர் எதேச்சாதிகாரி வேண்டுமென்று அவர் கருத்து கூறியிருந்தார். இதனால் நடந்து முடிந்த தேர்தலானது ஓர் இரும்பு மனிதரை தெரிவு செய்வதற்கான போட்டியாக அமைந்தது. இதில் லிபரல் ஜனநாயக வாதிகளாக கருதப்பட்ட அநேகர் ஓரங்கட்டப்பட்டார்கள்.

கடந்த 2015இல் நடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் ஒருவிதமான மாற்றத்திற்கான அலை வீசியது. அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. எனினும் மேற்கத்தைய லிபரல் ஜனநாயக நோக்குநிலையில் அது மாற்றத்துக்கான ஒரு லிபரல் அலையாகப் பார்க்கப்பட்டது. அமரர் மாளுவ சோபித தேரர் போன்ற மதகுருக்கள் 'சிவில் சமூகங்கள்', 'புத்திஜீவிகள்', 'கருத்துருவாக்கிகள்', அரசியல், சமூக. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அந்த அலையைக் கூட்டாக சேர்ந்து உருவாக்கினார்கள்.

ஆனால் இம்முறை தேர்தலில் ஒருவித இனவாத அலைதான் வீசியது. இரும்பு மனிதருக்கான போட்டி என்பது இலங்கைத் தீவில் அதன் பிரயோக நிலையில் ஒருவித இனவாத அலைதான். அந்த அலை லிபரல் ஜனநாயகவாதிகளை ஓரம்கட்டியது. நாட்டைப் பாதுகாக்க வல்ல இரும்பு மனிதர் யார் என்பதை நிரூபிக்கும் போட்டியாக அது மாறியது.

Image caption
கோட்டாபய பதவியேற்பு.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவருடைய கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டியிருந்தது. அப்போராட்டத்தின் முடிவில் சஜித் பிரேமதாச அரசுத் தலைவருக்கான வேட்பாளராக மேலெழும் அளவுக்கே நிலைமைகள் இருந்தன. இப்படியாக ரணில், சந்திரிகா போன்றவர்களை ஒதுக்கிவிட்டு இரும்பு மனிதர்களுக்கான போட்டி உருவாகியது. யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த இரும்பு மனிதர் இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழர்களின் கூட்டு மன நிலை
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதால்தான் தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களித்தார்கள் என்பதில்லை. மாறாக 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் தமிழ் மக்களின் தேர்தல்கால கூட்டு மனோநிலை எனப்படுவது அப்படித்தான் காணப்படுகிறது. அது ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரானது. கடந்த பத்தாண்டுகளாக மாறாது காணப்படும் அக்கூட்டு மனோ நிலைதான் இந்தமுறையும் வெளிப்பட்டிருக்கிறது.

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு
கோட்டாபய அனுராதபுரத்தில் பதவியேற்பது ஏன்? அந்த பௌத்த விஹாரையின் சிறப்பு என்ன?
இப்படிப் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாக தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிராகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் புதிய அரசுத் தலைவரான கோட்டபாய தமிழ் மக்களைத் எப்படி அணுகப் போகிறார் என்பதில்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல சிங்கள மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல இலங்கைதீவின் எதிர்காலம் மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சுற்றோட்டங்களும் தங்கியிருக்கின்றன.

இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா?
தமிழ் மக்களை அவர் இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா? அல்லது இரண்டு தேர்தல்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழ் மக்களின் பயங்களைப் போக்குவாரா?

அவருடைய தேர்தல் அறிக்கைகளின்படி அவர் தமிழ் மக்களுக்கு 13-வது திருத்தத்தைத் தாண்டி எதையும் கொடுக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. 13-வது திருத்தம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான சட்டமாகும். அச்சட்டத்திலும் அவர் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் போன்றவற்றைத் தரப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். அவருக்கு முன்பிருந்த அரசுத் தலைவர்களும் அந்த அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு இன்றுவரை வழங்கவில்லை.

அது மட்டுமல்ல 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானத்தை தாம் கைவிடப் போவதாகவும் கோட்டபாய கூறியிருக்கிறார். அந்தத் தீர்மானமானது இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை நிறுவுவதற்கு உரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான்.

ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூறப் போவதில்லை என்று கூறுகிறார். அவருடைய தேர்தல் பரப்புரைகளில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படியென்றால் யாருக்கு பொறுப்புக்கூறப் போகிறார்? தனி சிங்கள மக்களுக்கு மட்டும்தானா? ஓர் இரும்பு மனிதனாக வெற்றி பெற்றிருக்கும் அவர் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூறுவாரா இல்லையா என்பதில்தான் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் வெற்றி தங்கியிருக்கிறது.

வளர்ச்சி சாத்தியமா?
அவர் நாட்டின் தலையாய பிரச்சனையாக தேசியப் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் முன்வைக்கிறார். தேசியப் பாதுகாப்பு எனப்படுவது இனப் பிரச்சினையோடு தொடர்புடையது. அதாவது பொறுப்புக்கூறலோடு தொடர்புடையது. அது தீர்க்கப்படாத வரை முழு அளவில் முழுநிறைவான அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம்.

அவர் வெற்றி பெற்றது பெருமளவிற்கு தனிச் சிங்கள வாக்குகளால்தான். ஆனால் அந்த வெற்றியின் தொடர்ச்சியை தக்கவைப்பது என்பது தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் அரவணைத்துக் கொள்வதில்தான் தங்கியிருக்கிறது. அதாவது முழு நாட்டுக்கும் பொறுப்பு கூறுவதில்தான் தங்கியிருக்கிறது.

பிற செய்திகள்: