சம்பிக்கவின் சாரதியின் மனைவி, உயர் நீதிமன்றத்தில் மனு




முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான திலும் துசிதவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எதிராக இன்று (24) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

காலி, இமதுவ பகுதியை சேர்ந்த இரேஷா லக்மாலி என்பவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர், தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் அதன் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இரவு தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குழு ஒன்று தன்னையும் தன்னுடைய 3 மாத குழந்தையையும் கணவரையும் பலவந்தமாக பத்தரமுல்ல பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வித காரணமும் இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தன்னை கைது செய்து இவ்வாறு தடுத்து வைத்திருந்ததன் ஊடாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விசாரணைகளை மேற்கொண்டு தன்னுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.