வலப்பனை மண்சரிவு - ஆண் இருவர்கள் மற்றும் பெண் இருவர்கள் உயிரிழப்பு




(க.கிஷாந்தன்)
வலப்பனை பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட  ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ - மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், ஆண் இருவர்கள் மற்றும் பெண் இருவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் 30.11.2019 அன்று  இரவு நிகழ்ந்ததாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை பகுதியில் 30.11.2019 அன்று காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30.11.2019 அன்று இரவு, இவ்வாறு வீட்டின் மீது கற்பாறைகளுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜி.ஜி.ரம்பண்டா (58), கே.ஜி.பிசோமெனிக்கா (52), ஜி.ஜி. கலன்ன பெதும் கெக்குலண்தர (15), கே.எம்.திசானி கருணாரத்ன (18) ஆகிய நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதில் கே.எம்.திசானி கருணாரத்ன என்பவர் ஜி.ஜி.ரம்பண்டா என்பவரின் தம்பியின் மகள் ஆவார்.
புதையுண்ட நான்கு பேரில் ஆரம்பத்தில் மூன்று பேரின் சடலங்களை இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நுவரெலியாவில் இருந்து மேஜர் அசித்தரன திலக்க தலைமையில் இராணுவப்படை வரவழைக்கபட்டு தேடும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கபட்டது.
அதன்பிறகு மகனின் சடலத்தை தேடி இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்களது சடலங்கள் வலப்பனை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.