மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றவராக இருக்கக்கூடும் என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.
நாளை, மார்ச் 1ஆம் தேதி, மொகிதின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
மொகிதின் யாசின் மலேசியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆவார்.
தற்போது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள மகாதீர் முகமது தலைமையேற்றுள்ள பெர்சாத்து கட்சியை 2016இல் தொடங்கியவர் யாசின்.
2015இல் அவரை கட்சியில் இருந்து நீக்கிய அம்னோ (தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு) கட்சி அவருக்கு ஆதரவளித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அம்னோ கட்சி ஆட்சியில் 2009 முதல் 2015 வரை துணை பிரதமராக இருந்த இவர், ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விமர்சித்ததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டவராவார்.
சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஜோகோர் மாகாணத்துக்கும் அவர் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.


Post a Comment
Post a Comment