ஃபெயார் வெல் பெற்றுச் செல்லும் கௌரவ #நீதவான் ஹம்சா அவர்களுக்கு



ஒளி வேகத்தையும் ஓவர் டேக் பண்ணி விடுகின்றது நேரமும் காலமும்.. காலத்தின் வேகம் மின்னலை வாரியா வாரியா மோதலாம் வாரியா என்று சிங்கம் ஸ்டைலில் சவாலுக்கு அழைக்கின்றது. அதற்குள்ளாக மூன்று வருடங்கள் எப்படி இவ்வளவு வேகத்தில் எங்களை கடந்து சென்றது….மூன்று வருடங்கள் முடிந்த விட்டது ப்ரோஸ் என்று அடுத்தவர்கள் சொன்ன போதுதான் அட என்று விழிகளில் வியப்புக்குறிகள் விவசாயம் செய்கின்றன.
2017-01-01ம் ததிகதி திருகோணமலை பிரதம நீதவானாக (Chief Magistrate) கடமையேற்று வந்திருந்த எங்கள் பெரு மதிப்புக்கும் கௌரவத்துக்குமுரிய முஹம்மது ஹனீபா ஹம்சா திருகோமலையில் ஒரு நீதவானாக தனது மூன்று வருட காலத்தைய ஜுடிஷியல் சேவையை பூர்த்தி செய்து கொண்டு இன்று 2020-02-14ம் திகதி இடமாற்றல் பெற்று அக்கறைப்பற்று கம்பைன்ட் கோர்ட் (Combined Court) செல்லுகின்றார்.
மனசு இரும்பை விழுங்கியது மாதிரி அப்படியொரு பாரத்தில் கனக்கின்றது. ஓரளவுக்கு எதிர்பார்த்த இடமாற்றம்தான்….மூன்று வருடங்களாகி விட்ட நிலையில் இன்றோ நாளையோ என்று அவரும் இந்த இடமாற்றத்தை எதிர்பார்த்திருக்க கூடும். ஆனால் அவரது இந்த இட மாற்றம் பொளேரென்று கன்னத்தில் யாரோ சடாரென்று அறைந்து விட்டது போலிருக்கின்றது. சில மனிதர்களின் பிரிவு அப்படித்தான். நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்து விட்டு எதிர்பாராத ஒரு தருணத்தில் போய் வருகின்றேன் என்று வெளியேறிச் செல்லுகின்ற போது ஏற்படுகின்ற வேதனை அப்படியே ஆணியறைந்தாற் போல திக்பிரமை பிடித்து நிற்கும். அப்படியிருக்கின்றது இந்தத் தருணம்.
இட மாற்றம் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் இப்படி திடீர் புடீரென்று “…தாங்கள் ………………திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வருகின்ற வண்ணம் அக்கறைப்பற்று கம்பைன்ட் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்யப்படுகின்றீர்கள்” என்ற அந்த ட்ரான்ஸ்ஃபர் சேதி மனசுக்குள்ளே கார்டியோ வலிகளை கரன்ட் ஷொக்கிங்கில் தந்து விட்டுப் போனது.
பிரதம நீதவானாக கௌரவ ஹம்சா அவர்களின் இந்த மூன்று வருட காலம் திருகோணமலை நீதவான் நிதிமன்றத்தைய சட்டத்தரணிகளைப் பொறுத்த வரை ஒரு கோல்டன் கொண்டாட்டம். அவ்வளவு அழகான நாட்கள் அவை. ஹம்சா ஒரு பெஞ்ச் புன்னகை…..எப்போது பார்த்தாலும் திறந்த நீதிமன்றத்தின் தனக்குரிய பெஞ்சில் புன்னகைத்த முகத்தோடு….சொல்லுவார்களே Pleasant Face என்று……………நீதி சேவை புரிகின்ற அந்த அழகு எல்லோருக்குமே வாய்க்காத ரெயாரெஸ்ட் ரோயல் குவாலிட்டிகளில் ஒன்று.
இந்த மூன்று வருட காலத்துக்குள்ளே ஒரு நாளேனும் அவர் பெஞ்சிலிருந்து கொண்டு சட்டத்தரணிகளுடனோ அல்லது குற்றவாளிக் கூண்டில் இருப்பவர்களுடனோ அல்லது சாட்சியமளிப்பதற்காக வந்து நிற்கின்ற சக மனிதர்களிடமோ அவர் சீறிச் சினந்தது கிடையாது. தன்னை காண்டாக்கி கடுப்பேத்துகின்றவர்களிடம் கூட அவர் சதாவும் புன்னகையால் மட்டுமே பதில் சொன்னார். காண்டாக்குகின்றவர்கள் சட்டத்தரணிளாக இருக்கட்டும் அல்லது வழக்குககளுக்காக வருகின்ற எதிரிகளாக இருக்கட்டும். யாருடனும் அவர் கடிந்து கொண்டது கிடையாது. “எனக்கும் கோபம், டெம்பரமென்ட் எல்லாம் உள்ளே எகிறும்…ஆனால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதனை நான் மிகச் சரியாக கற்று வைத்திருக்கின்றேன்” என்பார்.
அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அதி முக்கியமான பாடமது. தன்னை கடுப்பேத்தி கோபத்தின் தேசத்துக்கு கொண்டு செல்லுகின்ற போதும் சற்றென ஒரு புன்னகையால் அத்தனை காண்டுகளையும் அத்தனை கோபங்களையும் அன்டர் சீஜுக்கு கொண்டு வருவதென்பது எல்லாராலும் முடியாத சமாச்சாரம். ஆனால் ஹம்சா நீதவான் அவர்களுக்கு அது வாய்த்திருக்கின்றது. அது ஒரு வகையில் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருட்கொடையும் கூட. ஆனால் நீதி நிர்வாகத்தில் சட்டத்தை முறையாக எப்ளை பண்ணுவதில் அவர் எப்போதுமே இறுக்கமாக இருந்தார். சட்டத்தில் கறார்…..அதனை நடைமுறைப்படுத்துவதில் கறார். ஆனால் அது அவரைப் பொறுத்த வரை எப்போதுமே Blind Folded ஆக இருந்தது கிடையாது.
குற்றமொன்றுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் கூண்டிலே நின்று கொண்டிருக்கின்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள்ள உரிமைகளைப் பற்றி கருத்திற் கொள்ளுகின்ற அதே வேளை சம அளவில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களையும் அக்கறைகளையும் பற்றி எப்போதும் அதி சிரத்தையோடு இருப்பார்.
சட்டத்தின் வரையறைக்குள்ளே நின்று கொண்டு வழக்குகளை ஆராய்கின்ற அதே நேரம் உச்ச கட்ட மனிதாபிமானத்தோடு அவரது நீதிமன்றம் பிரகடனம் செய்யப்பட்டிருந்து. ஒவ்வொரு வழக்கின் போதும் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்கள் சார்பாக விண்ணப்பம் செய்கின்ற போது அந்த வழக்குக்கு பொருத்தமான சட்டத்தை கொண்டு வரச் சொல்லுவார். தனது தீர்மானங்களை மாற்றக் கூடிய ஏதேனும் சட்டம் அல்லது அப்பீல் கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இருந்தால் கொண்டு வரச் சொல்லுவார். சட்டத்தரணிகள் மணித்தியாலக் கணக்கில் வாதாடினாலும் அதனை மிகப் பொறுமையாக காது கொடுத்து கேட்பார். சில வேளை சில வாதங்கள் வழக்குக்கு சம்பந்தமேயில்லாமல் இருக்கும். அப்போதும் கூட அவர் மனம் கோணாமல் பொறுமையோடு அதனை கேட்டுக் கொண்டிருப்பார். இதற்கெல்லாம் மிகப் பெரிய மனப் பக்குவம் வேண்டும். அவர் நிறைய தன்னை வளர்த்திருக்கின்றார்.
என்னைப் பொறுத்த வரை ஹம்சா அவர்களின் காலத்தில்தான் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரிந்த பல ஜுனிய கருப்பு கோர்ட்டுகள் சட்டத்தை கற்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டன. சட்டத்ததை கற்றுக் கொள்ள சட்டத்தில் அப்டேட் ஆக சட்டத்தரணிகளை எப்போதும் ஊக்குவித்துக் கொண்டும் அவர்களை சட்டம் பேசுகின்ற சட்டத்தரணிகளாக ட்ரான்ஸ்ஃபோர்ம் பண்ணுவதிலுமென்று எப்போதும் அவர் கற்றுக் கொடுக்கின்ற ஒரு நீதவானாக இருந்திருக்கின்றார். சில வேளை ஜுனிய லோயர்களின் நன்மை கருதி அவர் அவ்வப்போது மாலை நேரங்களில் வகுப்புகள் எடுத்திருக்கின்றார்.
நான் பேர்சனலாக பல தடவைகளில் ஆச்சர்யப்பட்டிருக்கின்றேன் நீதவானுக்கென்று சட்டத்தால் வழங்கப்பட்ட தற்றுணிபு அதிகாரங்களை (Discretionary Powers) அவர் பொறுத்தமான இடங்களில் முழுமையாக பயன்படுத்திய சந்தர்ப்பஙகளின் போது அந்த இடங்களிலெல்லாம் ஒரு நீதவானுக்கு இருக்க வேண்டிய துணிவும் தைர்யமும் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றது. குற்றவியல் நடபடிக் கோவையில் நீதவானுக்கு என்று வழங்கப்பட்டிருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் மிகச் சரியாக பயன்படுத்திய நீதவான்களுல் அவரும் ஒருவராக இருப்பாரென்பது என் இர்ரிபெட்டபிள் அனுமானம். குற்றவியல் நடபடிக் கோவை பிரிவு182ன் முழுமையான தாத்பரியத்தினை நான் அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். இது ஜஸ்ட் சின்ன உதாரணம்தான். சட்டத்ததைப் பொறுத்த வரை அவர் இறுக்கமாக இருந்தாலம் ஒரு போதும் அதனை அவர் கண்மூடித்தனமாக பின்பற்றியது கிடையாது. சட்டத்தின் நோக்கம் (Purpose of Legislature), அது எதனை சுட்டி நிற்கின்றது பொன்ற சமாச்சாரங்களை கட்டாயமாக கருத்த்திற் கொள்ளுவார்.
கௌரவ ஹம்சா நீதவான் அவர்கள் மக்கள் ஓரியன்டடாக இருந்தார். சட்டமென்பதே மக்களுக்கானது என்பதில் அவர் எப்போதும் உ றுதியாக இருந்தார். அதனால்தான் ஒரு சில தவிரக்க முடியாத வழக்குகள் தவிர மற்றெல்லா வழக்குகளிலும் Dettrenet Punishment என்பதனை விட Individual Reformation and Social Reformation என்பவற்றில் அதிகம் அக்கறை செலுத்தினார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பது போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் போதிய நிவாரணம் கிடைக்க வேண்டுமென்பதில் எச்சரிக்கையோடு இருந்தார். திறந்த நீதிமன்றத்தில் ஒரு பேர்ஃபெக்ட் நீதவானாக இருந்தவர் அதற்கு வெளியே சட்டத்துக்குள்ளே தனது எல்லைக்குள்ளே இருந்து கொண்டு ஆற்றிய சேவைகள் அதிகம்.
குச்சவெளியில் தற்போது ஒவ்வொரு புதன் கிழமையும் இயங்கிக் கொண்டிருக்கின்ற சுற்றுலா நீதிமன்றத்தினை (Circuit Court) நிரந்தர நீதிமன்றமாக மாற்றுவதற்கு அவர் எடுத்த முயற்சிகளும், அதே போல கிண்ணியாவில் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் வருவதற்கு அவர் எடுத்த முயற்சிகளும் இன்று சக்சஸ் என்று தம்ஸ் அப் காட்டி நிற்கின்றன. இப்படி எத்தனையோ. மறுபடி சொல்லுவேன்…….திறந்த நீதிமன்றத்தில் ஹம்சா அவர்கள் ஒரு நீதவானாக இருக்கின்ற போது காலை ஒன்பதரையிலிருந்து மாலை நான்கு மணியானாலும் எதற்கும் ஆத்திரப்படாமல் எதற்கும் கோபப் படாமல் எதற்கும் எரிச்சலடையாமல் தனது சேம்பரிலிருந்து வருகின்ற போது உதடுகளில் பொறுத்திக் கொண்டு வந்த புன்னகையை அப்படியே கடைசி வரைக்கும் வைத்திருந்து அதே புன்னகையோடு தனது சேம்பருக்கு திரும்பிச் செல்லுவதென்பதெல்லாம் வேறு லெவல். நான் சொன்னேனே…அது ஒரு சிலருக்கு மாத்திரமே வாய்க்கின்ற ரெயாரெஸ்ட் கொலிட்டி என்று. அதுதான் அது.
என்றென்றும் எமது மரியாதைக்குரிய திருகோணமலை மேனீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் சொல்லுவது போல “நீதவான் ஹம்சாவுக்கு ஒரு சிறந்த கல்விப் புலம் இருக்கின்றது. அந்தக் கல்விப் புலம் அவர் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்ற போதும் சரி தற்போது ஒரு நீதித் துறை அலுவலராக கடமையாற்றும் போதும் சரி மிகச் சரியாக அது வெளிப்படுகின்றது” என்பது பேருண்மை.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் அவரால் வழங்கப்பட்ட பெரும்பாலனா தீர்ப்புகளை எடுத்து வாசித்திருக்கின்றேன். எல்லாத் தீர்ப்புகளிலும் அவர் தனது தீர்ப்புக்கான ஜஸ்டிஃபிகேசன்களை கொடுத்திருக்கினற் அழகும்…அதற்கான பின்னணியும் அவரது Academical Background, Judicial Professionalism மற்றும் Tenable Analysis போன்ற சமாச்சாரங்களை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அவரால் எழுதப்பட்ட தீர்ப்புகளை வளர்ந்து வரும் ஒரு சட்டத்தரணி படித்தாலே நிறைய நிறைய கிரிமினல் லோவை கற்று குற்றவியல் வழக்குகளில் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு ஹை டெக் கருப்பு கோட்டாக வந்து விடலாம்.
அந்தளவுக்கு நிறயை சமாச்சாரங்களை தனது தீர்ப்புகளில் கொடுத்திருப்பார் அவர். சொல்லப் போனால் எனக்கான பல ரெஃபரென்சுகளை அவரின் தீர்ப்புகளிலிருந்து பல தடவைகளில் உருவியிருக்கிறேன் நான். நீதவான் ஹம்சாவின் அயராத் தேடல், தனது சட்ட அறிவை அப்டேட் பண்ணுவதில் இருக்கின்ற ஆர்வம். சதாவும் படித்துக் கொண்டேயிருக்க வெண்டுமென்ற அவரது கமிட்மென்ட், சட்டத்தில் புதுப்புது வஸ்துகளை கண்டடைவதில் இருக்கின்ற தீரா வேட்கை என ஏகப்பட்ட கொலிட்டிகளால் அவர் கொண்டாடப்பட வேண்டியவர்.
போய் வாருங்கள் கௌரவ நீதவான் அவர்களே. உங்களுக்குள்யேிருக்கின்ற அந்த தூய்மையான உள்ளம், தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும் என்பது போல சட்டத்துறையில் உங்களது தொடர் தேடல், அப்டேட்டிங் ஆர்வங்கள், ஒரு ஜுடிஷீயல் ஒஃபீசர் என்பதற்க மேலாக தங்களுக்குள்ளே இயல்பாயமைந்திருக்கின்ற எல்லையற்ற மனிதாபிமானம், தொழில் நேர்மை, நீதித்துறை மீதான காதல், சக மனிதனை காயப்படுத்தி பார்க்காத மனோ நிலை, இவையணைத்தையும் தாண்டி படைத்தவன் மீதான அச்சம் என்ற எல்லாமும் உங்களை உங்களது துறையில் இன்னுமின்னுமும் உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.
அல்லாஹ் நாடினால் நாளையொரு நாள் உங்களது தீர்ப்புகளையும் எஸ்ஆல்ஆரில் நாங்கள் வாசிக்கலாம். அதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். உள் மனசு சொல்லுகின்றது அது நடக்குமென்று. அல்லாஹ் உங்களையும் உங்களது நற்செயல்களையும் பொறுந்திக் கொள்வானாக.
கிண்ணியா சபருள்ளாஹ்
2020-02-14