ஜல்லிக்கட்டுக் காளையால்,இளைஞன் உயிரிழப்பு


கோவையில் உள்ள செட்டிப்பாளையம் திடலில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதால் சுபாஷ்சந்திரபோஸ்(26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ், காளையை அடக்க முயற்சித்தபோது அவரது மார்பு பகுதியில் காளையின் கொம்பு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருந்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், மாடு முட்டியதால் பலத்த காயம் ஏற்பட்டு 17 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 900 மாடுகளும், 820 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.