நடிகர் விஜய் படப்பிடிப்பு தலத்தில் வருமான வரி விசாரணை


சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தில் நடித்த நடிகர் விஜய் ஆகியோரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்திவருகிறது.
முதலில் நெய்வேலியில் நடிகர் விஜய் நடிக்கும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புத் தலத்தில் விசாரணை நடந்தது. பிறகு விஜய்-யின் சென்னை சாலிகிராமம் வீடு மற்றும் நீலாங்கரை வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது.
2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய், நயன்தாரா நடிக்க அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படம் தயாரானது. இந்தப் படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
படம் வெளியான சில தினங்களும் வசூல் சுமாராக இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக படம் பெரும் தொகையை வசூலித்ததாக செய்திகள் வெளியாகின.
கோப்புப்படம்
இந்நிலையில், இந்தப் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவந்தது. இந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் செய்த தயாரிப்பாளர் அன்புச் செழியனின் தி.நகர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்தப் படத்தில் நடித்த விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் நடந்து வருகிறது. அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக சென்றபோது, வருமான வரித் துறை அதிகாரிகளை படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துணையுடன் உள்ளே சென்ற ஏழு அதிகாரிகள் விஜயிடம் பிகில் திரைப்படம் தொடர்பாக விசாரித்தனர்.
இதற்குப் பிறகு, நடிகர் விஜய் காரிலேயே சென்னைக்கு அழைத்துவரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.