அட்டனில் எட்டு பேர் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு


(க.கிஷாந்தன்)

அட்டன் நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் நேற்றிரவு முதல் (31.03.2014) 14 நாட்களுக்கு சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ சுகாதார வைத்திய பிரிவின், பொது சுகாதார பரிசோதகர்களாலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த  29 ஆம் திகதி அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அட்டனிலுள்ள வர்த்தகரொருவரும், அவரது சாரதியும் நீர்க்கொழும்பு சென்று வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக நீர்க்கொழும்பு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளதாலேயே, பாதுகாப்பு கருதி அங்குசென்றவர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அட்டன் ஹிஜ்ராபுர பகுதியைச் சேர்ந்த வர்த்தகரினதும்  (ஆறு உறுப்பினர்கள்) அவரது சாரதியினதும் (இருவர்)  குடும்பங்களே இவ்வாறு தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

சாரதி கொழும்பு சென்றதால் அவரின் இரு பிள்ளைகளும் சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச்சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. எனவே, இரு தரப்புகளில் இருந்தும் மொத்தமாக 8 பேர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.