நகரங்களில் குவிந்தனர், மக்கள்


(க.கிஷாந்தன்)
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (06.04.2020) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகைதந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
ஏப்ரல் முதலாம் திகதி பிற்பகல் 2 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால் அண்மைய நாட்களை விடவும் இன்றைய தினம் சனக்கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ  ஆகிய நகரங்களில் இந்நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை காணக்கூடியதாக இருந்தது. எனினும், ஒரு சிலர் எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
குறிப்பாக தலவாக்கலை நகரில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பேணும் வகையில் மக்கள் நிற்கவேண்டிய இடங்கள் குறித்தொகுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிறத்தில் அடையாளம் இட்டுகாட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை, ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையைவிடவும் கூடுதல் தொகைக்கு பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நகரப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
8 மணிநேரமே ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே இடம்பெற்றன.