.உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாமென கூறியவரின் ஜனாஸா


தான் மரணித்தால் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாமென கூறியவரின் ஜனாஸா நல்லடக்கம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

சுமார் மூன்று மாத காலமாக குடும்ப உறுப்பினர்களால் கவனிப்பாரற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதுடைய நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மரணமடைந்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்துவந்த இந் நபர் சுமார் மூன்று மாதத்திற்கு முன்னர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வைத்தியசாலை ஊழியர்களின் பராமரிப்பில் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர், தான் மரணித்தால் தனது உடலை குடுபத்தினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளதுடன், தனது உடலை கையளிக்க வேண்டிய நபர் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் வாழைச்சேனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து மரணமடைந்த நபரின் உடலை பொறுப்பேற்று கல்குடா ஜனாஸா நலன்புரி சேவைகள் அமைப்பின் ஊடாக ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.