டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்


வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார அதிகாரி; காரியாலய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேசம் முழுவதும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குடியிருப்புக்கள் மாத்திரமன்றி அரச அலுவலகங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தினையும் பிரதேச செயலக உள்ளக வெளியக சூழலினை துப்பரவு செய்யும் பணியினையும் இன்று(26) முன்னெடுத்தது.

பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமைவாக உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட கிளைத்தலைவர்களின் பங்கு பற்றுதலோடு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 150இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்ற இச்சிரமதானப்பணி மூலம் பிரதேச செயலக உள்ளக வெளியக பிரதேசங்கள் துப்பரவு செய்யப்பட்டன.

டெங்கு பரவக்கூடிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளின் ஒரு பகுதி மண்ணிட்டு நிரப்பப்பட்டதுடன் டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களும் அழிக்கப்பட்டன.

அத்தோடு பிரதேச செயலக சூழலை மாசுபடுத்தும் பொருட்கள் யாவும் அகற்றப்பட்டு உழவு இயந்திரங்களின் உதவியோடு பிரதேச செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.