சீனப் பொருட்களை புறக்கணிப்பது இந்தியாவுக்கு எந்தளவுக்கு சாத்தியம்?


செய்தி நிறுவன ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, சீன மொபைல் நிறுவனமான ஒப்போ புதன்கிழமையன்று இந்தியாவில் ஆன்லைனில் வெளியிடவிருந்த பொருள் அறிமுக திட்டத்தை ரத்து செய்தது.

இந்தியாவின் சமையலறைகள் மற்றும் படுக்கையறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஏர் கண்டிஷனிங் இயந்திரங்கள், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் வாலெட்டுகள் என அனைத்துவிதமான பொருட்களிலும் சீனா எங்கோ, ஏதோ ஒரு வடிவத்தில் உள்ளது.

"புதிதாக ஒன்று வேண்டும், அது மலிவானதாகவும் இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அழகானதாகவும் இருக்கவேண்டும்" என்று வாடிக்கையாளர்கள் விரும்பும்போது, இவை அனைத்திற்கும் வணிகர்களிடம் இருக்கும் ஒரே தெரிவு சீனப் பொருட்கள் மட்டுமே.

எனவே, டெல்லியின் சதர் பஜார் அல்லது மேற்கு வங்காளத்தின் சிலிகுரியின் ஹாங்காங் சந்தை என எதுவாக இருந்தாலும், அவை அனைத்துமே சீனப் பொருட்களால் நிரம்பியிருக்கின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பத்து ஸ்மார்ட்போன்களில், சீன ஸ்மார்ட்போன்களான ஒப்போ, சியோமி போன்ற பிராண்டுகள் எட்டு என்ற விகிதத்தில் இருப்பது நிதர்சனமான உண்மை.

இந்தியா-சீனா எல்லை தகராறு

இதுபோன்ற சூழ்நிலையில், 4 ஜி-க்கு சீன சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களில் செய்தி வரும்போது, இது உண்மையில் எந்த அளவு சாத்தியமானது என்ற கேள்வி எழுகிறது.

எனவே, இந்தியாவில் சீனாவின் முதலீடு எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள். சீனா இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடாக ஆறு பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தானில் சீனாவின் முதலீடு 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும்.

மும்பையைச் சேர்ந்த வெளிநாட்டு விவகார சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸ், இ-காமர்ஸ், ஃபிண்டெக், மீடியா / சமூக ஊடகங்கள், தளவாடங்கள் போன்ற சேவைகளில் சீனா முதலீடு செய்யும் 75 இந்திய நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்தியாவின் 30 யூனிகார்ன்களில் 18 இல் சீனாவில் பெரும் பங்கு உள்ளது என்று அதன் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய தனியார் தொடக்க நிறுவனத்தை யூனிகார்ன் என்று அழைக்கிறோம். தொழில்நுட்பத் துறையில் சீனா முதலீடு செய்திருக்கும் விதமானது, அந்நாடு இந்தியாவின் மீது தனது வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை காட்டுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

எடுத்துக்காட்டாக, பைட் டான்ஸ் என்பது டிக்டாக்கின் மூல நிறுவனமாகும், இது சீனாவைச் சேர்ந்தது. யூடியூபுடன் ஒப்பிடும்போது இது இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

சீன முதலீடு குறித்து இந்திய அரசு எச்சரிக்கையை வெளியிடும் வகையில், சமீபத்தில் தனது புதிய அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்.டி.ஐ) கொள்கையை ஒத்திவைத்தது. இந்தியாவுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ள நாடுகளிடம் இருந்து பெறப்படும் அனைத்து முதலீடுகளுக்கும் அரசின் முன் ஒப்புதல் தேவை என்று கூறியது.

இந்தியா-சீனா எல்லை தகராறுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வணிகத்தில் சீனாவுக்கு அதிக நன்மைகள்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ள விதம் குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 2000ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்கள் மட்டுமே. இது 2008 இல் 51.8 பில்லியன் டாலராக அதிகரித்தது.

அதாவது, அமெரிக்காவிற்கு பதிலாக சீனா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியது.

2018 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் புதிய உச்சங்களை எட்டின, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர்களாக இருந்தது. இரு நாடுகளுக்கும் பொருளாதார தேவைகளில் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை இது காட்டுகிறது.

இருப்பினும், 2019 ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சற்று குறைந்து, 92.7 பில்லியன் டாலர்களாக மட்டுப்பட்டுள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் வணிகம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், இரு நாடுகளின் வர்த்தகமும் சமமாக இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டாம்.

2018 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் 95.54 பில்லியன் டாலர், ஆனால் அதில் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 18.84 பில்லியன் டாலர்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளத்தில் காணப்படும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவிற்கு இந்தியா விற்பனை செய்யும் முக்கியமான பொருட்கள்:

பருத்தி

தாமிரம்

வைரம் மற்றும் பிற இயற்கை ரத்தினங்கள்

மருந்துகள்

தகவல் தொழில்நுட்ப சேவைகள்

பொறியியல் சேவைகள்

இதைத் தவிர, அரிசி, சர்க்கரை, பல்வேறுவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள், இறைச்சி பொருட்கள், பருத்தி நூல் மற்றும் துணி ஆகியவற்றை இந்தியா சீனாவிற்கு விற்பனை செய்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், நாம் பிற நாடுகளுக்கு விற்கும் மருந்துகள் போன்ற பல பொருட்களுக்கு, சீனாவிலிருந்து மூலப்பொருட்களையும் வாங்குகிறோம்.

ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சமநிலை இல்லாததும் உண்மைதான்.

இந்தியா, சீனாவிடம் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. அதாவது, சீனாவுக்கு விற்கும் பொருட்களை விட இந்தியா, அந்த நாட்டிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குகிறது. 2018 ஆம் ஆண்டில், இந்திய-சீன வர்த்தக பற்றாக்குறை 57.86 பில்லியன் டாலர்களாக இருந்தது. சீனப் பொருட்களை வாங்குவதற்கு தடை விதிப்பதற்கு முன்னதாக, இந்தியா வேறு மலிவான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தெளிவு.