குவைத்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தால்,வேலை இழக்கும் ஆபத்து


புலம்பெயர்ந்தோர் தொடர்பாக குவைத்தில் இயற்றப்பட்டுள்ள சட்ட விதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றம் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய பொறியியலாளர்கள் வேலை இழக்க நேரிட்ட அந்த கவலைக்கிடமான சூழல் வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர்களின் மனதில் மீண்டும் உருவாக்கியுள்ளது.

குவைத் தேசிய அவையின் சட்ட மறுஆய்வுக் குழு, புலம்பெயர்ந்தோர் குறித்துத் தயாரிக்கப்படும் மசோதாவை சட்டபூர்வமானதாக ஒப்புக்கொண்டுள்ளது என்று ஆங்கில பத்திரிகையான 'அராப் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முன்மொழிவு மற்ற குழுக்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டத்தின் வரைவு, குவைத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அங்கு வசிக்கும் சுமார் 10 லட்சம் இந்தியர்களில், எட்டு அல்லது எட்டரை லட்சம் பேர் திரும்பி வர வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செளதி அரேபியாவின் வடக்கிலும், இராக்கின் தெற்கிலுமாக அமைந்திருக்கும் இந்தச் சிறிய தேசத்தின் மொத்த மக்கள் தொகையான சுமார் 45 லட்சத்தில், குவைத்தியர்களின் எண்ணிக்கை சுமார் 13 அல்லது பதிமூன்றரை லட்சம் மட்டுமே.

எகிப்து, ஃபிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்

இந்த உத்தேச சட்ட மசோதாவில், மற்ற நாடுகளிலிருந்து வந்து குவைத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரியும் நசீர் மொஹம்மத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், வேறு வழியின்றி, மேற்பார்வையாளராக பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கூறுகிறார்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், என்ன ஆகும் என்று இங்குள்ள இந்தியர்கள் கவலை கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இருந்தும் நசீர் மொஹம்மத் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மகிழ்கிறார்.

2018 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட புதிய விதிமுறைகள் காரணமாக, ஐஐடி மற்றும் பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றவர்கள் கூட வேலை இழந்து வந்த நிலையில், தனக்குப் பழைய நிறுவனத்திற்குப் பதிலாக புது நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், தான் அங்கு தொடர்ந்து இருக்க முடிந்ததாகவும் இவர் கூறுகிறார்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அப்போது இந்தப் பொறியாளர்கள் விவகாரம் குறித்து குவைத் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்த போதும், இதற்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"பொறியியல் பட்டம் பெற்ற ஏராளமான இந்தியர்கள் குவைத்தில், மேற்பார்வையாளர்கள், ஃபோர்மேன் போன்றவர்களின் சம்பளம் மற்றும் தரவரிசையில் பணியாற்றுகிறார்கள். ஆனால், ஒரு பொறியாளரின் பொறுப்பையும் பணிச்சுமையையும் அவர்கள் சுமக்க வேண்டியுள்ளது" என்று நசீர் மொஹம்மத் கூறுகிறார்.

2008 ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய வெளிநாட்டவர் சட்டம் போன்ற விதிமாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக குவைத்தில் வசிக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் கூறுகிறார். 2016-இல் செளதி அரேபியா நிதாகத் சட்டத்தை அமல்படுத்தியபோது இது மேலும் தீவிரமடைந்தது.

நிதாகத் சட்டத்தின்படி, செளதி அரேபியாவின் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குவைத் நாடாளுமன்ற உறுப்பினர், காலித் அல் சோலஹ் என்பவர், சென்ற ஆண்டு அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "வேலை வாய்ப்பு மற்றும் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் சேவைகள் பலவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்" என்பது அவர் வைத்த கோரிக்கை.

சஃபா அல் ஹாஷேம் என்னும் மற்றொரு உறுப்பினர், சில ஆண்டுகளுக்கு முன்பு, "புலம் பெயர்ந்தோருக்கு ஒரு வருடம் வரை ஓட்டுநர் உரிமம் வழங்குவதைத் தடை செய்வது மற்றும் ஒரே ஒரு கார் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிப்பது, இவற்றுக்கான சட்டம் கொண்டு வர வேண்டும்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சஃபா அல் ஹாஷேமின் இந்த கருத்துக்கு பல வட்டாரங்களில் கண்டனக் குரல்களும் ஒலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்தின் தேசிய அவையில், 50 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இருப்பினும், பணக்காரர்கள் மட்டுமே அங்கு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகவும் சில உள்ளூர் மக்கள் அறிக்கைகளை வெளியிடுவதைக் காண முடிந்தது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 1961 வரை, பிரிட்டனின் 'பாதுகாப்பில்' இருந்த குவைத்துக்கு இந்தியர்கள் செல்வது நீண்ட காலத்திற்கு முன்னரே தொடங்கியது.

தற்போது, வர்த்தகம் முதல் அனேகமாக எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். குவைத் வீடுகளில் ஓட்டுநர்கள், சமையல்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று மொத்த எண்ணிக்கை, மூன்றரை லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த அத்தனை பணியிடங்களையும் மற்றவர்களைக் கொண்டு நிரப்புவது என்பது அவ்வளவு விரைவாக சாத்தியப்படக்கூடிய விஷயமல்ல என்று மக்கள் நம்புகிறார்கள்.

ரேவன் தி சோசாபடத்தின் காப்புரிமைFAISAL MOHAMMAD ALI

ரிவன் டிசோசாவின் குடும்பம் 1950-களில் இந்தியாவிலிருந்து குவைத்துக்கு குடிபெயர்ந்தது, அவர் அங்கு தான் பிறந்தார்.

ரிவன் டிசோசா உள்ளூர் ஆங்கில செய்தித்தாள் டைம்ஸ் குவைத்தின் ஆசிரியர் ஆவார்.

பிபிசியுடனான உரையாடலின் போது அவர், "புலம்பெயர்ந்தோர் குறித்த இந்த மசோதா அரசியலமைப்பிற்கு இணக்கமானது என்று சட்டக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் மனிதவளக் குழு மற்றும் பல குழுக்களின் ஒப்புதலைப் பெறவேண்டும். பல கட்டங்களை இன்னும் கடக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு தான் இதை ஒரு மசோதாவாக முன்வைக்க முடியும். சட்டமாவது குறித்து அதற்குப் பிறகே முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

ரிவன் டிசோஸா இதை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கிறார்.

கோவிட் -19 பாதிப்பால் ஏற்பட்ட நிலை மற்றும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களைத் திரும்பப் பெற இந்திய அரசுக்கு குவைத் அரசால் வைக்கப்பட்ட கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது குறித்து அந்த அரசாங்கத்தை சேர்ந்த சிலரிடம் அதிருப்தி நிலவுகிறது. இப்போது அவர்கள் எந்த ஒரு நாட்டின் பணியாளர்களையும் சார்ந்து இருக்க விரும்பவில்லை