ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்


(நிக்சன்) 

மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் நினைத்ததைச் சாதிக்கவில்லை.

பதவிக்கு வந்த மூன்றாம் மாதம் ஆரம்பித்த மைத்திரி - ரணில் முரண்பாடு ராஜபக்ச குடும்பத்திற்கும் அந்தக் குடும்பத்தை நம்பி அரசியலில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்தது. அதன் பெறுபேற்றை 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இருநூறுக்கும் அதிகமான சபைகளைக் கைப்பற்றி ராஜபக்ச அணி வெளிப்படுத்தியது. தமது அதிகாரத்தை மீண்டும் நிரூபித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைத் துணிவோடு தூக்கி எறிந்து விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியோடு சங்கமித்து மைத்திரிபால சிறிசேன ஆட்சியை அமைத்ததால் ராஜபக்ச குடும்பத்துக்கு கோபம் இருந்திருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்று கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதும் அவருடைய தந்தையார் ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் ஏற்பட்ட அதிருப்தியும் வெறுப்புமே 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதி ராஜபக்ச குடும்பம் தங்களுக்கொன்று என்று தனியொரு கட்சியை ஆரம்பிக்க உந்து சக்கதியானது.

அதுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதியன்றே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி பசில் ராஜபக்சவினால் அங்குராட்பணம் செய்யப்பட்டது.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம் 2005ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த மகிந்த ராஜபக்ச அந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதிவியேற்றபோது கூறிய வாசகத்தை 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிறைவேற்றியிருக்கிறார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால
படக்குறிப்பு,

மைத்ரிபால

சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது பெரும் இழுபறிகள். முரண்பாடுகளுக்கு மத்தியில் அன்று ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றிருந்ததும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் புணரமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். 2010ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தபோது. அம்பாந்தோட்டையை மையப்படுத்திய புதிய கட்சி ஒன்றின் உருவாக்கம் பற்றியும் பிரஸ்தாபித்திருந்தார்.

மூன்றாவது முறையாகவும் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனக் குறிப்பிட்டு ராஜபக்சவின் அரசாங்கம் 2014இல் உருவாக்கிய 18ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தோல்வியென அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுன இல்லத்திற்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச நேராடியாகவே இந்தியா மீது குற்றம் சுமத்தியதோடு மீண்டும் வருவேன் எனவும் சூளுரைத்திருந்தார்.

அன்று மகிந்த ராஜபக்சவுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஓன்று போர்க்குற்றம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவது. அதற்கேற்றமுறையில் சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கத்தின் பக்கம் வரவைப்பது. இரண்டாவது. சந்திரிகாவுக்கு எதிரான போராட்டம். அதாவது சந்திரிகாவின் தந்தையார் எஸ்டபிள்யுஆர்டி. பண்டாரநாயக்கா உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி அதற்கு மாற்றீடாக ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி அதனைத் தேசியக் கட்சியாக மாற்ற வேண்டும் என்பது.

மஹிந்த ராஜபக்ஷ
படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட தோல்வி மகிந்தவுக்கு அந்த முயற்சிகளின் அடைவை எட்டமுடியாமல் போய்விட்டது. ஆனாலும் நல்லாட்சி என்று மார்தட்டிய மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் பலவீனங்களை நன்கு பயன்படுத்திய மகிந்த ராஜபக்ச இன்று இலங்கை அரசியலின் கதாநாயகநாக மாறிவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகிய நாளில் இருந்தே தனது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். அந்தச் சிந்தனை வெளிப்பட்ட சில மாதங்களிலேயே மைத்திரி- ரணில் முரண்பாடு உருவானமை மகிந்தவுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்ததெனலாம்.

2016இல் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன என்ற புதிய அரசியல் கட்சி அந்த நம்பிக்கையின் மற்றுமொரு தளமாக மாறியது. ஏனெனில் பாராம்பரியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐம்பதுக்கும் அதிகமான மூத்த உறுப்பினர்கள் பலர் வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டனர். ஆகவே 2015இல் ஏற்பட்ட தோல்வியோடு துவண்டுபோகாமல் அன்றில் இருந்தே தன்னைத் திடப்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ச 2015இல் இழந்த அவமானத்தையும் தோல்வியையும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி தனது இளைய சகோதாரர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கிப் பெரும் எழுச்சியோடு ஈடுசெய்தார். 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் அந்த எழுச்சியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தனது மேற்படி இரு நோக்கங்களையும் அவர் நிறைவேற்றியுமுள்ளார்.

அந்த இரண்டு நோக்கமும் நிறைவேறுவதற்கு மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவகையில் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர் என்றால் அதற்கு மாற்றுக் கருத்தில்லை. மைத்திரி-ரணில் அரசாங்கம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட திர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கியிருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதற்கு ஒத்துழைத்தது. இதன் பெறுபேறாக சர்வதேச விசாரணை அல்லது இனப்படுகொலை என்று கூறிக் கொண்டு ராஜபக்ச குடும்பத்தையும் அவருடைய சகாக்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முயற்சி தற்காலிகமாகவேணும் நிறுத்தப்பட்டது. அது உள்ளக விசாரணையாக அல்லது சர்வதேசத்தையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையாகவும் பரிந்துரைக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கே
படக்குறிப்பு,

ரணில்

இதனை மகிந்த தரப்பு வெளிப்படையாகக் கண்டித்திருந்தாலும் இச் செயற்பாட்டின் மூலம் தாங்களும் இலங்கை அரசும் காப்பாற்றப்படுகின்றது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். கலப்புமுறை அல்லது உள்ளக விசாரணைக்குக்கூட ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கவில்லை. கால அவகாசம் கேட்டுக் கேட்டுக் காலத்தைக் கடத்தியிருந்தார். இதனால் திருப்தியடைந்தது ராஜபக்ச குடும்பம்தான். சிலவேளை மகிந்த மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தால் நிலைமை வேறாக அமைந்திருக்கும்.

ஆனால் நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றுவது என்பதைவிட இலங்கை அரசு மீதான சர்வதேசக் குற்றச்சாட்டையும் அவப்பெயரையும் நீக்க வழி சமைத்ததெனலாம். அதேவேளை. சந்திரிகாவுக்கு எதிரான மேற்படி கட்சி உருவாக்கம் மற்றும் அம்பாந்தோட்டையை மையப்படுத்திய புதிய அரசியல் கலச்சாரம் ஆகிய மேற்படி இரு விடயங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதித்தித்தும் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டும் மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது ராஜபக்ச குடும்பம்.

விகிதாசாரத் தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறவே முடியாது. ஆனால் ராஜபக்ச குடும்பம் அறுதிப் பெறும்பான்யைப் பெற்றிருக்கிறது. ஆகவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கப்போவது என்ன என்ற கேள்விகளே தற்போது விஞ்சியுள்ளன. 2005ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பதவியில் இருந்தபோது நடந்த அதே விடங்கள்தான் தொடருமா அல்லது புதிய மாற்றுச் சிந்தனையோடு அரசியல்.

பொருளாதார வியூகங்கள் வகுக்கப்படுமா என்பதுதான் பலருடைய கேள்வி. எழுபது ஆண்டுகால அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு என்ன என்பதுதான் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு. அதிகாரத் துஷ்பிரயோகம் ஊழழற்ற ஆட்சி வேண்டுமென்பது முற்போக்கான சிங்கள மக்களின் எதிர்ப்பார்ப்பு. ஆனால் இந்த இரண்டு எதிர்ப்பார்ப்புகளையும் ராஜபக்ச ஆட்சி முழுமைப்படுத்துமா என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.

சிங்கள மக்களைப் பெறுத்தவரை அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை வாக்குகள் மூலம் கொடுத்தால் அதிகாரத் தூஸ்பிரயோகம் ஊழல் மோசடி நடைபெறாது என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தவரை தங்களுக்கென்றிருந்த சர்வதேசப் பிடியும் 2015ஆம் ஆண்டோடு தளர்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ராஜபக்ச ஆட்சி அமைத்துள்ளதால் அரசியல் திர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றவொரு அச்சம் உருவாகலாம். 2015இல் நல்லாட்சி என்ற பெயரில் நிலைமாறுகால நீதியை வழங்குவதைவிட ராஜபக்ச குடும்பத்தையே மைத்திரி-ரணில் காப்பாற்றியுள்ளனர் என்ற ஆதங்கமும் தமிழர் மத்தியில் உண்டு. உள்ளதையும் இழந்து விடுவோமோ என்ற ஏக்கத்தில் முஸ்லிம் மக்கள் உள்ளனர். மண் சரிவுக்கான இழப்பீடுகள். காணி வழங்குதல் சம்பள உயர்வுகள் இனிமேல் கிடைக்குமா என்ற சந்தேகம் மலையகத் தமிழர்கள் மத்தியில்.

கோட்டாபய ராஜபக்ஷ
படக்குறிப்பு,

கோட்டாபய ராஜபக்ஷ

மலையக மக்களைப் பிரநிதித்துவப்படுத்தி ராஜபக்ச அணியில் ஜீவன் தொண்டமான் வெற்றிபெற்றாலும். எந்தளவு தூரத்துக்கு மலையகத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்ற சந்தேகங்களும் எழாமலில்லை. வடக்குக் கிழக்கில் ராஜபக்ச அணியில் அல்லது அந்த ராஜபக்சவுக்குச் சார்பான முறையில் ஒன்றிரண்டு பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருந்தாலும் ஈழத்தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் உரிமைகளுக்கான தீர்வு அபிவிருத்திகள் அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு.

மறுபுறத்தில் எப்போதுமே சீனாவின் பக்கம் நிற்கும் ராஜபக்ச அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றதால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமா என்ற சந்தேகங்கள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளுக்கு ஏற்படலாம்.

ஏனெனில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இராணுவ நிர்வாகி அரசியல்வாதியல்ல. அத்துடன் சீனா பாக்கிஸ்தான் இராணுவக் கட்டமைப்புகளோடு நெருங்கிய உறவைப் பேணுபவர். யாருக்குமே கட்டுப்படாதவர் என்பதைத் தெரிந்துகொண்ட இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை விவகாரத்தில் திடீர் மாற்றங்களைச் செய்யும் நிலை உருவாகலாம். ஆனால் இந்தோ- பசுபிக் பிராந்திய நலனின் அக்கறை கொண்ட அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் அடுத்து வரும் நாட்களில் ராஜபக்ச ஆட்சியைத் தம் பக்கம் ஈர்க்க ஈழத்தமிழர் விவகாத்தை மீண்டும் கையில் எடுக்கும் என்று கூற முடியாது.

முடிந்தவரை நிதியுதவிகளை வழங்கியும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டும் எதிர்க்காலத்தில் இலங்கையோடு பயணித்துத் தம் பக்கம் ஈர்க்கலாம்.

ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தைக் கவிழ்க்க 2015ஆம் ஆண்டு எடுத்த முயற்சியும் அதன் சாதகமற்ற பெறுபேறுகளையும் கண்டுணர்ந்த இந்த நாடுகள் முடிந்தவரை உதவிகள் மூலமே இலங்கையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும்.

ஆகவே தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவை எப்படித் தங்கள் பக்கம் எடுத்துக்கொள்வது என்பது குறித்த உத்திகளைக் கையாள வேண்டும். 2015இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றி அரசியல் தீர்வுக்கான ஆரம்பத்தை உருவாக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இந்திய அமெரிக்க அனுசரனையோடு கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு அந்தக் கடமை உண்டு என்பதை தமிழ்ப் பிரதிநிதிகள் தங்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையின் அங்கீகாரத்தின் மூலம் வலியுறுத்தலாம்.

ஏனெனில் அந்தக் கடமையில் இருந்து ஜெனீவாவும் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் தப்பிவிட முடியாது. ராஜபக்ச அரசாங்கத்தின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்த இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர் விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுப்பது இந்தோ - பசுபிக் பிராந்திய நலனுக்கு உகந்ததாகலாம்.

ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்ற ரணில் பிரதமராக இருந்தபோது ஜெனீவா மனித உரிமைச் சபையில் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு நன்றியாகவே ஐக்கியதேசியக் கட்சி எந்தவொரு ஆசனங்களையும் எடுக்காத நிலையிலும் தேசியப்பட்டியல் மூலம் ஆசனம் வழங்கப்பட்டிக்கின்றது என்ற கருத்தும் உண்டு. அவ்வாறே தோல்வி நிலையில் சென்ற சுமந்திரனும் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்ற கருத்துக்களும் யாழ்ப்பாணத்தில் இல்லாமலில்லை.

 வரைபடம்

 
ரஷ்யா880,563 பாதிக்கப்பட்டவர்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 8 ஆகஸ்ட், 2020, பிற்பகல் 2:48 IST

இவ்வாறான நிலையில் குறைந்தபட்சம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற கேள்விகள் எழுகின்றன. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவையே நம்பிச் செயற்படுவதால். இந்தியா சொல்வதை அமெரிக்கா கேட்கும் என்ற நம்பிக்கை தமிழ் பிரதிநிதிகளுக்கு உண்டு. ஆனால் இந்தியா தானாக முன்வராது. தமிழ்ப் பிரதிநிதிகள் முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு அதற்கான நகர்வுகளை மேற்கொள்ளத் தலைப்பட வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வல்ல. ஆனால் கடும்போக்குக் கொண்ட ராஜபக்ச அரசாங்கத்திலேயே ஆரம்பப் புள்ளியாக அதற்கான நகர்வை மேற்கொண்டால் பதில் கிடைக்கலாம். ஏனெனில் தமது இந்தோ- பசுபிக் பிராந்திய நலனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஏற்பாடுகளை ராஜபக்ச அரசாங்கம் செய்துவிடுமோ என்ற அச்சம் இனிமேல்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆரம்பிக்கப் போகின்றது.

அத்தோடு தேசம் தாயகம். இறைமை என்பதை நிறுவ வேண்டுமானால் சர்வதேச நாடுகள் மத்தியில் உறுதியான நம்பிக்கையைத் தமிழ்ப் பிரதிநிதிகள் முதலில் கட்டியெழுப்ப வேண்டும். சாதி மாதம். பிரதேச வேறுபாடுகள் கடந்த உணர்வுகளும் வளர்ச்சியடை வேண்டும். இவ்வாறான சூழலிலேதான் தமிழர்கள் மீட்சியைக் காணமுடியும். இல்லையேல் கொழும்பை மையப்படுத்திய சிங்களக் கட்சிகளின் தமிழ்ப் பிரதிநிதிகளே வடக்குக் கிழக்கில் எதிர்காலத்தில் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றும் ஆபத்தான நிலை தோன்றலாம்.