ஆலையடிவேம்பில்,சுமார் 6056 குடும்பங்களுக்கு இடர்கால உலர் உணவுகள்


 


வி.சுகிர்தகுமார் 

  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான உலர் உணவுப்  பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் சுமார் 6056 பேருக்கான தலா 5ஆயிரம் ருபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் பணிப்புரை மற்றும் அவரது ஒத்துழைப்பின் பேரில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பிரதேச செயலக கணக்காளர் க.பிரகாஸ்பதியின் கண்காணிப்பின் கீழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பொருள் விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக முதற்கட்டமாக அலிக்கம்பை மற்றும் கண்ணகிராமத்தினை சேர்ந்த சுமார் 565 இற்கும் மேற்பட்ட மக்களுக்கான 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொதியில் அரிசி சீனி பருப்பு கோதுமைமா பால்மா பைக்கற் மற்றும் பெண்களுக்கான கைஜின் பொருட்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழிலுக்கு செல்லமுடியாமல் கஸ்டத்தின் மத்தியில் இக்கட்டான நிலையில் வாழும் தமக்கு அரசாங்கம் வழங்கிய உலர் உணவுப்பொதிக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அங்கு வாழும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்பணியை சிறப்பாக முன்னெடுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி கூறினர்.
இதேநேரம்; ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொடர்ந்தும் அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் நடைபெற்றுவரும் நிலையில் 6 பேர் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.