பிரிட்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள், பயணத் தடை விதிக்கும் நாடுகள்


 


நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

அயர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களை நிறுத்தியுள்ளன.

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இது குறுகிய காலத்திற்கு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று காலை கூடுகிறது. வைரஸின் இந்த புதிய வடிவம் லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகிறது.

சனிக்கிழமையன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த பகுதிகளுக்கு புதிய நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். கிறிஸ்துமஸ் காலத்திற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வடிவம் மிக ஆபத்தானது என்பதற்கும், இது தடுப்பு மருந்துக்கு வேறுமாதிரியாக எதிர்வினையாற்றும் என்பதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ள உயர்மட்ட சுகாதார அதிகாரிகள், இது 70 சதவீதம் அதிக அளவில் பரவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டதாகவும், இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் பிரிட்டனின் சுகாதாரச் செயலர் மேட் ஹென்காக் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த நாடுகளில் கட்டுப்பாடுகள்?

இந்த புதிய வகை குறித்து பிரிட்டனிடமிருந்து அறிவிப்பு வந்த ஒரு சில மணி நேரங்களில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி வரை தடை விதிப்பதாக நெதர்லாந்து அறிவித்தது.

பிரிட்டனிலிருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஞாயிறன்று மேலும் தெரிவித்தது அந்நாடு.

ஞாயிறன்று பல முக்கிய ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.