கல்முனை மாநகர நகர்புறத்தில் உள்ள மூன்று கடைகளில் திருட்டு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை மாநகர நகர்புறத்தில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு (28) திருட்டு முயற்சி  சம்பவம் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களான தொலைபேசி விற்பனை நிலையம் தலைக்கவசம் விற்பனை நிலையம் இரும்பு விற்பனை நிலையம் என்பவற்றின்  பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும் திருடப்பட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார்.

மேலும் சம்பவ இடத்திற்கு   ஸ்ரீலங்கா முஸ்லீம்  காங்கிரஸின் கல்முனை மாநகர சபை  உறுப்பினர் அன்பு முஹைதீன் றோசன் அக்தர் சத்தார் மற்றும் கல்முனை மாநகர சபை  உறுப்பினர் ஏ.சி.ஏ சத்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை சந்தித்த  கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

கொரோனா காலகட்டத்தில் இவ்வாறான திருட்டுக்கள் பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றுள்ளமை கவலைக்குரியது.சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கல்முனை பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி   ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.அவர்கள் மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடுகளை வழங்கி உள்ளனர்.இவ்வாறு இருந்த போதிலும் எமது பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கு எந்த சக்திக்கும் இடமளிக்க முடியாது என்பதை தெரிவிப்பதாக கூறினார்.

இதே வேளை கல்முனை தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்துஇ கல்முனையின் சில பிரதேசங்கள் நேற்று  (28) இரவு  முற்றாக முடக்கப்பட்டு  இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.

கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரையான 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த 3 கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.