சாலை மறியல், சமாதானம் செய்தபின் உடல் அடக்கம்


 




இலங்கை கடலில் இறந்த 4 தமிழக மீனவர்களில் ஒருவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். பிறகு அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மற்ற மூன்று மீனவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின், மேசியா ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி படகு மூழ்கி அவர்கள் நால்வரும் இறந்ததாக கூறப்பட்டது.

அந்த மீனவர்களின் உடலை மீட்ட இலங்கை கடற்படை ஊர்காவல் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

நடுக்கடலில் இந்தியக் கடலோரக் காவல் படை வசம் உடல்களை ஒப்படைக்கும், இலங்கை கடலோரக் காவல் படை.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையின், காங்கேசன் துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடலோர காவல்படை கப்பலில் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு இந்திய இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படை கப்பலில் இருந்த அந்த உடல்களை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி படகில் சென்று பெற்று கரைக்கு கொண்டுவந்தனர்.