அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக காணிகளற்றவர்களுக்கு அரச காணிகளை முதலீட்டு வாய்ப்பிற்காக வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி  பிரதேச செயலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் காணி உபயோக கொள்கை திட்டமிடல் திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அமைவாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வு 3 நாட்களாக  இப்பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின்  வழிகாட்டலில் உதவிப்பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா  தலைமையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள 2030 பேரில் 3 கட்டங்களாக  அழைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் கடந்த புதன்கிழமை(17)  153 பேர் அழைக்கப்பட் போதிலும் அதில் 95 பேர் மாத்திரமே வருகை தந்தனர்.அத்துடன் இன்று(18) இரண்டாம் கட்ட  இந்நேர்முகப்பரீட்சைக்கு அதிகமானவர்கள் தோற்றியதுடன் அவர்களின் தேவை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

இங்கு காணி உறுதி பெற்றுக்கொள்ளல் ,காணி அளவையிடப்பட்டு அளவைப்படம் தயாரித்தல், காணியின் பிணக்குகளை தீர்த்தல், காணி அடையாளம் வைத்து கடன் பெறுதல், தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு உதவி பெறுதல், தயாரிப்புக்களை மேம்படுத்துவதற்கு உதவி செய்தல், தயாரிப்புக்களுக்கான இயந்திரங்களை பெறுவதற்கு உதவி பெறுதல் மற்றும் ஏனைய காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் போன்ற விடயங்களும் இந்நேர்முகப்பரீட்சையின்போது ஆராயப்பட்டது.

மேலும் இந்நேர்முக பரீட்சையில் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் ,காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம் பஸீர், குடியேற்ற உத்தியோகத்தர் என்.எம்.எம். அஸ்லம் சுஜான் ,காணி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ.ஜெயந்தி, ஆர்.ரூபிகா ,ரி .ரதனி ,ஆகியோர் கலந்து கொண்டனர்.