“ஈழத் தமிழர்களுக்கு பச்சை துரோகம் இழைத்த பாஜக அரசு”


 


கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பினார். அதில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இத்தீர்மானம் இன்று நிறைவேறியது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன்மொழிந்தன. தீர்மானம் முன்மொழிந்தது முதலே இந்திய அரசு மௌனம் காத்துவந்தது. இதற்குது தூபம் போடும் விதமாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அப்போதை மதிமுக பொதுச்செயலாளர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்படியும், இலங்கைக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். தற்போது தீர்மானம் மீதான சோதனை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது. இதனை விமர்சித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்தார்கள்; இல்லையென்றால் இலங்கைக்கு ஆதரவாகவே இந்திய அரசு வாக்களித்திருப்பார்கள் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்