25ஆவது குடமுழுக்கு



 வி.சுகிர்தகுமார் 0777113659  


  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர 17 குண்ட மகா பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு இன்று சுபநேரத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீP சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம் கும்பாபிஷேகம் கர்மாரம்பமானது; கடந்த 25ஆம் திகதி ஆரம்பமானதுடன்;
31 ஆம் நாள் மற்றும் சித்திரை 01ஆம் திகதிகளில் எண்ணெய்க்காப்பிடலும் இன்று மகாகும்பாபிசேகமும் நடைபெற்றது.

இன்று அதிகாலை பிரதான கும்ப யாகபூஜை நடைபெற்றது. பின்னர் மாணவர்களின் நடன நிகழ்வுடன் கலச கும்பம் உள்வீதி உலா இடம்பெற்றதுடன் பெரியபிள்ளையாரின் பரிவார மூர்த்திகளுக்கும்  கலச குடமுழுக்கு செய்யப்பட்டன.

தொடர்ந்து அடியார்கள் புடைசூழ அரோகாரா எனும் பக்தர்களின் வேண்டுதலுடன் பிரதான கும்ப வெளிவீதி உலா இடம்பெற்று பெரியபிள்ளையாருக்கு குடமுழுக்கு இடம்பெற்றதுடன் விசேட பூஜைகளும் இடம்பெற்றன

ஆலய தலைவர் மு.வடிவேல் மற்றும் ஆலயக்கும்பாபிசேக குழுத் தலைவர் எஸ்.புண்ணியமூர்த்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ள கும்பாபிசேக குடமுழுக்கினை தத்புருஷ சிவாச்சாரியார் பிரதிஷ்டா கலாநிதி சண்முகவசந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

குடமுழுக்கை முன்னிட்டு கலசம் தாங்கிய இரு யானைகள் ஊர்வலம் மற்றும் யாழ் பாலமுருகனின் நாதஸ்வர கச்சேரி என்பன சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

குடமுழுக்கின் பின்னர் கலந்து கொண்ட அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் உள்ளிட்டவர்களும் ஆலயத்தினரால் கௌரவிக்கப்பட்துடன் சமூக நல்லிணக்கம் மற்றும் பண்டைய கால பாரம்பரிய முறைகளின் படி அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் நிருவாகமும் குடழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
மேற்படி ஆலயமானது சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் சோழர்காலத்தில் அரசபிரதானிகளால் கருங்கற்திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு பண்ணப்பட்டது.

1611 களில் போர்த்துக்கேயரால் தரைமட்டமாக இடிக்கப்பட்டது
கண்டி இராசதானியின் போது மீண்டும் 5 மண்டபங்கள் கொண்ட ஆலயமாக கட்டப்பட்டது

1640 களில் மாணிக்கப்போடியார் காலத்தில் இவ்வாலயம் இடிக்கப்பட்டு மீண்டும் 1964 புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. அந்த வகையில் , போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் 25வது மகாகும்பாபிஷேகம் ஆகும்.
 மேலும் இவ்வாலயம் அரசபிரதானிகளால் குருக்கள் மானியம் பெற்ற சிறப்புக்கொண்டது
 தற்போது பண்டைய கருங்கற் கோயிலின் தொல்பொருட்கள் கற்தூண்கள் கபோதகம் எழுதகம் அரைப்புக்கற்கள் நிலைக்கற்கள் ஆதிக்கோயிலின் அத்திவாரம் என்பன தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.