ரஜினி காந்துக்கு,தாதா சாஹிப் பால்கே விருது


 


இந்த ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன்.

விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக அவரது பங்களிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ள ஜவடேகர், ஆஷா போஸ்லே உள்ளிட்ட நடுவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.