கல்முனை பிராந்தியத்தில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 07.00 முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும்!!


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



கொரோனா 3 ஆவது அலையினை  கல்முனை பிராந்தியத்தில் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் ஜி. சுகுணனின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கொரோனா கட்டுப்பாட்டு நிலைகள் தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை மீறி சாய்ந்தமருதில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன். இன்று மாலை முதல் கல்முனை பிராந்தியத்தில்  எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 07.00 முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் சுகாதார வழிமுறைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட வேண்டும். அப்போது அங்கு சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் கடற்கரை, மற்றும் பொழுதுபோக்கு பார்க் என்பன மூடப்படும். வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் அந்த பிரிவின் கிராம நிலதாரியிடம் இடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆன்டிஜன் பரிசோதனைகள் தொடரும் என்பதுடன் வரியோர்களுக்கு உதவுவோர் தமது ஊருக்குள் உள்ளவர்களுக்கு தமது உதவிகளை மட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். என்ற தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றினர்.

இங்கு கருத்து தெரிவித்த  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனையில் இன்று சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத தனியார் கம்பெனி ஒன்று மூடப்பட்டுள்ளது. என்றார் மேலும் இலங்கையில் ஆபத்தான கொரோணா வைரஸ்கள் பரவி வருகின்றன. நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மத்தியமுகாம்  வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தடுப்பூசி பெற்றிருந்தும் தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஆகவே பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சகல சுகாதார துறை அதிகாரிகளையும் கேட்டு கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது.  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் அவர்களும், கல்முனை மாநகர சபை சார்பில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் அவர்களும் இதில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன், கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. கே.எம். அர்சத் காரியப்பர், பிராந்திய தொற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் என். ரமேஷ், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.டி. சுஜித் பிரியந்த, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்முனை பள்ளிவாசல் தலைமை நிர்வாகி எஸ்.எம்.ஏ. அஸீஸ், பாதுகாப்பு படை அதிகாரிகள், கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் என பலரும் கலந்து கொண்டனர்.