மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்



 (க.கிஷாந்தன்)

 

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 

இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரில் இன்று (22.06.2021) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

" மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரத்தில் இருந்து விழுந்தவரை மாடு முட்டுவதுபோல, எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தீர்மானத்தை அரசு மீளப்பெற வேண்டும்.

 

அதேபோல முன்னறிவிப்பு, முன்னேற்பாடுகள் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல்களும் அதிகரித்துவருகின்றன. எனவே, இதற்கான பொறிமுறையை அரசாங்கம் உடன் வகுக்க வேண்டும்." - எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

 

ஜே.வி.பியனரால் முன்னெடுக்கப்படும் குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நாளைய தினமும் நாட்டில் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.