கல்முனை தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களையும் இனவாத செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்


 


සිහාන්)



கல்முனை தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களையும் இனவாத செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிப்பதாக  தமிழ் இளைஞர் சேனை தெரிவித்துள்ளது.

இன்று(8) ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது

கல்முனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தமிழ் பிரதேச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளையும்,  தமிழ் மக்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்களையும்,  உண்மைக்கு புறம்பாக செய்திகளை திட்டமிட்டுவெளியிடுவதையும் வன்மையாக கண்டிகின்றோம்.கல்முனை நகர் முழுமையாக தமிழ் மக்கள் குடியிருப்புக்களையும்  சிங்கள வாடி எனும் சிங்கள குடியிருப்பையும்  மட்டுமே உள்ளடக்கியிருந்தது.

கடந்த கால நிலைமைகளை சாதகமாக பயன்படுத்தி கல்முனை கிறவல் குழி எனும் அரச காணியில் சட்டவிரோதமாக இஸ்லாமபாத் எனும் தனி முஸ்லிம் கிராமம் உருவாக்கப்பட்டது இதற்கு வர்த்தமானி அறிவித்தல் இல்லை.  இந்த கிராமம் எவ்வித நிருவாக ஒழுங்கு முறைகளையும் பின்னபற்றாமல் உருவாக்கப்பட்டிருந்தது.  பின்னாட்களில் தமிழ் செல்வந்தர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்பு வீட்டுத்திட்டத்திலும் தனியாக முஸ்லிம் குடும்பங்களை மட்டும் திட்டமிட்டு குடியமர்த்தியிருந்தனர்.

இவ்வாறான சூழ்ச்சிகளையும், இனவாதமான செயற்பாடுகளையும், இதற்கு பக்கபலமாக செயற்பட்ட அரச அதிகாரிகளின் பக்கச்சார்பான செயற்பாடுகளையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.கல்முனை பிராந்தியத்தில்  உள்ள பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற ரீதியில் இந்த விடயத்தை இங்கு சுட்டிக்காட்டுவதற்கான காரணம் தற்போதும் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றமையே.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட கல்முனை 01 C கிராம சேவகர் பிரிவிலுள்ள அரசகாணியான, மழை நீர் கடலுக்குள் வடிந்து செல்லும் பகுதியை முஸ்லிம் தனி நபர் ஒருவர் தனக்கு உரியது என மண்நிரப்பிய சம்பவம் இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாகத்தின் கீழ் உள்ள கல்முனை 1 C கிராம சேவகர் பிரிவில் இந்த  காணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் அதனை தடுக்க நடடிவடிக்கை எடுத்தபோது அவர் தாக்கப்பட்டுள்ளார்.  இதனை வன்மையாக கண்டிப்பதுடன் அரச காணியினை அபகரிக்கின்றமைக்கும், அரச உத்தியோகத்தரை தாக்கியமைக்கும்  சட்டம் தன் தண்டனையை வழங்க வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். குறித்த காணியில் அரச காணி என பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையு ம் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட அரச காணிகளை தனியார் அபகரிக்கும் முயற்சிகளையோ, நீர் ஏந்து பகுதிகள் தனியாரால் மூடப்படுவதையோ கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளார் உரிய அதிகாரிகள் இன மத வேறுபாடு பாராமல் அது தமிழராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சட்ட நிருவாக ஒழுங்கின்படி தங்கள் கடமையை முன்னெடுக்கின்றார்கள். ஆனால் இதனை இனவாதமாக ஊடகங்களில் சிலர் கருத்து முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களில் பொய்யான செய்திகளை வெளியிட்டு உண்மையை பொய்யாக்க முனையும் செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அண்மையில் பெரியநீலாவணை கிராமத்திலும் சலவைத் தொழிலில் ஈடுபடும் அரச காணியில் இவ்வாறு முஸ்லிம் நபர் ஒருவர் மண் நிரப்பியள்ளார் அதனாலும் அங்கு ஒரு குழப்ப நிலை உருவாகியிருந்தது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான  அதிகாரங்கள் வழங்கப்படாமல் திட்டமிட்டு தடுக்கப்படுவதும், கல்முனை வடக்கு பிரதேசத்திலுள்ள பொதுக்காணிகள் ஏனையோரால் அபகரிக்க முயற்சிப்பதும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை மேலும் மேலும் வளர்க்கவே வழிகோலும்.
 இவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளும், அரசாங்கமும் எடுக்க வேண்டும்.  இவ்வாறான சம்வங்களும் இன முருகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்வை; காண வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும் என  தெரிவித்துள்ளது.