மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் போராட்டம்



 (க.கிஷாந்தன்)

 

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், சபைக்கு முன்னால் - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (12.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மலையகத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்துமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

சம்பள உயர்வு என்பது கண்துடைப்பு நாடகமே. கைக்காசுக்கு வேலை செய்பவர்களுக்கு இன்னமும் 700 ரூபாவே வழங்கப்படுகின்றது. எனவே, ஆயிரம் ரூபா விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேபோல ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ஊடக அடக்குமுறைக்கு இடமளிக்கமுடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.