எச்சரிக்கை...! நாட்டில் மேலும் 160 கொரோனா மரணங்கள்




கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்புகள் இதுவாகும். 

87 ஆண்களும் 73 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 124 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் ஒருவர் மரணித்துள்ளார். 

அதன் அடிப்படையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,935 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் மேலும் 2,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,717 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 307,345 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 38,022 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

- கயல்