மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவில் மண்சரிவு



 (க.கிஷாந்தன்)

 

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டம் 2ம் இலக்கம் மத்திய பிரிவில் மண்சரிவு காரணமாக 3 வீடுகளின் சமயலறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

 

மவுண்ட்வேர்ணன் தோட்ட இரண்டாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் சமயலறைப்பகுதியில் 12.08.2021 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

மண்சரிவினால் மூன்று வீடுகளின் சமயலறைப்பகுதிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

 

அத்தோடு, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக மேலும் மூன்று வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

மொத்தமாக 6 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் தற்காலிகமாக மவுண்ட்வேர்ணன் தோட்ட அம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த இடத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட திம்புள்ள பத்தனை கிராம சேவகர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் தோட்ட நிர்வாகத்தினர் மக்களை சந்தித்து நிலைமையை விசாரித்ததோடு, நிவாரண உதவிகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் மக்கள் இருக்கின்றனர்.