20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டதன் பலனாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர் அடுத்த வருடத்தில் ஒருவர் 1000 கோடி ரூபாவை அபிவிருத்திக்காக பெற உள்ளனர்



வி.சுகிர்தகுமார் 0777113659  


  நாம் வாக்களிப்பது யாருக்கோ! உதவிகளை எதிர்பார்ப்பது யாரிடமோ! இந்த தவறைதான் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் என அம்பாரை மாவட்ட பொதுஜனபெரமுன கட்சியின் அமைப்பாளர் எஸ்.சாந்தலிங்கம் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்; பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதனை அம்பாரை மாவட்ட பொதுஜனபெரமுன கட்சியின் அமைப்பாளர் எனும் அடிப்படையில் மிகவும் தேவதனையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
இந்த நிலையில் அதிக சிரமத்திற்கு  மத்தியிலேயே அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் மூலமாக பெற்று மேற்கொண்டு வருகின்றேன்.

இதன் அடிப்படையிலேயே இவ்வருடம் கிராமத்திற்கு 20 இலட்சமும் 2020 இல் 30 இலட்சமும் ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இன்று எதிர்கட்சியிலே இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டதன் பலனாக அடுத்த வருடத்தில் ஒருவர் 1000 கோடி ரூபாவை அபிவிருத்திக்காக பெற உள்ளனர். ஆனால் நமது பிரதேசத்தில் ஆளுங்கட்சியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் அவற்றை இழந்திருக்கின்றோம்.

ஆனாலும் அமைச்சர் விமலவீர திசாநாயக்க அவர்கள் சிங்கள மக்களுக்கு கிடைக்கும் உதவியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். ஆனாலும் எதிர்வரும் வருடத்தில் நூறு வீதமான அபிவிருத்தி திட்டங்கள்; அரசாங்காத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். ஆகவே அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்காலத்திலாவது சிந்தித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  
 
கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன்; கணக்காளர் க.பிரகஸ்பதி உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.