தமிழ் டெக் யூடியூபர், இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்



 


அம்மாவும், "நல்ல யோசனையாக உள்ளது. தாராளமாகச் செய், இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் பார்ப்பார்கள்," என்று ஊக்கமளித்தார். அந்த ஊக்கத்தை உறுதுணையாகக் கொண்டு தமிழ் டெக் யூடியூப் சேனலைத் தொடங்கினார் தமிழ்செல்வன்.


பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் கிடையாது

"தமிழில் இந்த யூடியூப் சேனலைத் தொடங்கும்போது என்னுடைய நோக்கம் ஒன்று மட்டும்தான். 10 பேர், 100 பேர் என்று பார்த்தாலும்கூடப் போதும். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகம் எழுபவர்களுக்கு, இதெல்லாம் தேவைப்படுபவர்களுக்கு இந்தத் தகவல்கள் கிடைக்கவேண்டும்.


ஆனால், தேவையான தகவலைச் சரியாகக் கொடுக்கும்போது மக்கள் எந்தளவுக்கு வரவேற்பார்கள், என்பதை தமிழ் டெக்கிற்குக் கிடைத்த வீச்சு உணர வைத்தது."


இப்படியாக ஆங்கிலம், தமிழ் என்று தொடங்கியவர், ஆரம்பக்கட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், என்று ஒவ்வொரு சாதனத்தையும் புதிதாக வாங்க முடியாது. அதற்கான நிதி அவரிடம் கிடையாது. ஆகவே, நண்பர்களுக்கு அவர் இணைய வர்த்தகத்தில் வாங்கித் தரும் பொருட்களை 2 அல்லது 3 நாட்களுக்கு வைத்து, காணொளி எடுத்துவிட்டுக் கொடுப்பார்.


"பல நண்பர்கள் ஆரம்பக்காலத்தில் உதவினார்கள். அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் என் நண்பருக்கு நான் கிருஷ்ணகிரியில் ஆர்டர் போட்டு பொருளை வாங்குவேன். அந்தப் பொருளை வைத்து, மதிப்பாய்வு, அலசல், பயன்பாடு என்று அனைத்து காணொளிகளையும் அதை வைத்து எடுத்துவிட்டு, அவருக்கு அனுப்பி வைப்பேன்.


உள்ளூர் நண்பர்களுக்கு என் முகவரியிலேயே பொருளை வர வைப்பேன். அதில் வரும் புதிதாக வெளியான தொழில்நுட்ப சாதனஙக்ளை, அவர்களின் அனுமதியோடு சில நாட்கள் வைத்து, காணொளியாகப் பதிவு செய்துவிட்டு அவர்களுக்கு அனுப்புவேன். அதுபோக, பெங்களூரு, சென்னை என்று வெளியூர்களில் இருக்கும் சில நண்பர்களிடம், நேராகச் சென்று அவர்களுடைய தொழில்நுட்பச் சாதனங்களை வாங்கி வந்து, வேலையை முடித்துவிட்டுத் திரும்பச் சென்று கொடுப்பேன்," என்கிறார் தமிழ்செல்வன்.


இவ்வளவு தூரம் முயன்று அவர் அப்போது இந்த காணொளிகளைச் செய்தாலும், அதை சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலுமே செய்ததாகச் சொல்கிறார். அதோடு, கருத்துப் பெட்டிகளில் பார்வையாளர்கள் தெரிவிக்கும் சந்தேகங்களுக்கும் அதனாலேயே மதிப்பளித்து, அவற்றை விளக்குவதாகவும் சொல்கிறார்.


அவருடைய முயற்சியின் விளைவாக 8 மாதங்களுக்குப் பிறகு 1,000 சப்ஸ்கிரைபர்கள் தமிழ் டெக் சேனலுக்குக் கிடைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்களில் 5,000 பேர் வந்தார்கள். அதற்கடுத்த சில மாதங்களில் 10,000 பேர், 50,000 பேர், ஒரு லட்சம் பேர் என்று வளர்ந்த தமிழ் டெக் சேனல் இன்று முப்பது லட்சம் சப்ஸ்கிரைபர்களோடு யூடியூபின் முன்னணி டெக் சேனலாக வளர்ந்து நிற்கிறது.


வெற்றிக்காக பணத்தின் பின்னால் ஓடவில்லை

தமிழ் டெக் இதுவரை கடந்து வந்த பாதையில், இருபது லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வரும்வரை தமிழ்செல்வன் தனி ஒருவராக அதை நிர்வகித்து வந்தார். 2020-ம் ஆண்டு முதல் அவருக்குக் கீழே இரண்டு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.


தமிழ் டெக் யூடியூபர் தமிழ்செல்வன்

பட மூலாதாரம்,TAMIL TECH

"நான் தொடங்கிய நேரத்தில், தமிழில் வெளியிடும் ஒரு காணொளியை 1000 பேர் பார்த்தாலே வெற்றியடைந்துவிட்டதாக நினைப்பேன். ஏனெனில், அப்போதெல்லாம் 50, 100 என்றே பார்வையாளர்களின் எண்ணிக்கை இருக்கும். அன்று எதிர்கொண்ட போராட்டங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், விழுந்த அடிகள் என்று கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.


நேர்மறையாக, பலருக்கும் பயனுள்ள, நன்மைபயக்கூடிய ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறேன் என்று திருப்தியாக இருக்கிறது. தொழில்ரீதியிலான பார்வையோடு சேனலை அணுகவேண்டிய தவிர்க்கமுடியாத சூழலில்தான் இன்று இருக்கிறோம். ஆனாலும்கூட, கொடுக்கக்கூடிய தகவல்களில் அதிகக் கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கம்.


இன்று வரை ரம்மி போன்ற விஷயங்களை விளம்பரப் படுத்துவதைத் தவிர்த்து வருகிறேன். அதை மறுத்ததால் பல வருமானங்களை இழந்துள்ளோம். ஆனால், அதற்காக வருந்தவில்லை. ஏனெனில், தமிழ் டெக் தொடங்கிய காலத்தில் நான் எதிர்கொண்ட தடைகளுக்கு நடுவேகூட தகவல்களை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இருந்தேன். இனியும் அந்தப் பொறுப்பை உணர்ந்து அப்படித்தான் இருப்பேன்.


மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை, அவர்களுக்கு விரும்பிய வகையில், புதுமையாகக் கொடுக்கவேண்டும். பல்வேறு டிரெண்டுகளுக்கு நடுவே அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது ஆரம்பத்தில் கடினம் தான். ஆனால், அதையே புதுமையாகச் செய்யும்போது அவர்களுடைய வரவேற்பைப் பெறலாம்," என்கிறார்.


"என்னுடைய வெற்றிக்காக நான் பணத்தின் பின்னால் ஓடவில்லை. ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய முயலும்போது, அதன்மூலம் நமக்குக் கிடைக்கும் வளர்ச்சி தொடக்கத்தில் குறைவாகவே இருக்கும். ஆனால், மக்களிடம் அது சென்று சேரத் தொடங்கும்போது, நீங்கள் எதிர்பார்க்காத உயரத்தை அடைவீர்கள்."