மலையக புகையிரத சேவைகளும் பாதிப்பு..


 


(க.கிஷாந்தன்)




புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.

 

அந்தவகையில், 13.01.2022 அன்று அதிகாலை நானுஓயாவிலிருந்து கண்டி செல்லவிருந்த புகையிரதம் நானுஓயா புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

புகையிரத நிலைய அதிபர்கள் உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமை, சாதாரண அட்டவணையை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்து அதன் பின்னர் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படுகின்றன.

இதனால் புகையிரத பயணிகளும் பகையிரத நிலைய அதிபர்களும் பாதிக்கப்படுவதாகவும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அரச ஊழியர்கள் என பலர் பாதிப்புக்குள்ளாகினர்..

பாடசாலை மாணவர்கள் புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தினை அறியாது புகையிரத நிலையங்களுக்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதே நேரம் பயணிகள் சிலரும் தங்களது பயணத்தினை புகையிரத ஊடாக தொடர முடியாது பஸ் தரிப்பிடங்களை நோக்கி செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.

நாளை முதல் தொடர் விடுமுறையொன்று காணப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக வருகை தரயிருந்த போதிலும் இவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக இன்று புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.