உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு வலுப்பெறும்



 


(காரைதீவு  நிருபர் சகா)


சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது நம்பிக்கை.

இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் அங்குரார்ப்பணக்கூட்டத்தில் பேசிய கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எல்.புத்திக தெரிவித்தார்.

காரைதீவுப்பொலீஸ் பிரதேசத்திற்கான மக்கள் பாதுகாப்பு உபதேசக்குழுவின் முதலாவது அங்குரார்பணக்கூட்டம் நேற்று காரைதீவு பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத் தலைமையில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:
மக்கள் சுதந்திரமாக நிம்மதியாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதற்காக பொலிசார் சேவையாற்றிவருகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அது 100வீதம் சாத்தியமாகாது. எனவே பொதுமக்கள் பொலிசார் உறவு முக்கியானது.

தலைக்கவசம் என்பது மனிதஉயிரைப்பாதுகாக்கும். மற்றது அது இலங்கைச்சட்டம்.இருப்பினும் ஊருக்குள் சந்தர்ப்பசூழ்நிலைக்கேற்ப தலைக்கவசமில்லாமல் பயணிப்போரை அதன் பாதகநிலையை அறிவுறுத்தி வருகிறோம்.குற்றத்தைஎழுதி நீதிமன்றிற்கு அனுப்பி தண்டனை வழங்கி அரசாங்கத்திற்கு நிதி சேர்க்கவேண்டுமென்பதற்காக தலைக்கவசமில்லாதோரை பிடிப்பதில்லை. தங்கள் உயிர்ப்பாதுகாப்பில் பொலிசாருக்கும் பங்குண்டு என்ற கடமைஉணர்வில் அதனைச்செய்கிறோம். பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

காரைதீவுப்பிரதேசத்தில் இரு கிராமசேவையாளர்பிரிவுக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வீதம் நியமித்துள்ளோம்.அப்பிரிவிற்குள்வரும் அத்தனை விடயங்களுக்கும் அவர் பொறுப்பாகவிருப்பார்.பொது மக்களின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த உபதேசக்குழு உறுப்பினர்களை நான் தொடர்ந்து காணவிரும்புகிறேன். என்றார்.

ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள், பள்ளிவாசல் தலைவர் ,தேவாலயதலைவர் ,தவிசாளர் கே.ஜெயசிறில் உள்ளிட்ட  உபதேசக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.