"முன்பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாத ஜனாதிபதி"





 (வி.ரி.சகாதேவராஜா))


ஒரு முன் பள்ளி மாணவருக்கு இருக்கின்ற அறிவு ஆற்றல் இல்லாத ஜனாதிபதியை நாட்டு மக்கள்  தெரிவு செய்திருக்கிறார்கள். அதன் விளைவை  அனைத்து மக்களும் இன்று அனுபவிக்கிறார்கள். இந்த கடினமான காலகட்டத்தை மிகுந்த நம்பிக்கையோடு கடக்கவேண்டும்.

 இவ்வாறு காரைதீவில் உரையாற்றிய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்தார்.

 தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முன்னாள் தளபதி அமரர் மகாதேவன் சிவநேசனின் ஓராண்டு ஞாபகார்த்தமாக காரைதீவு விபுலானந்த மைதானத்தில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி தலைமையில்நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்.

 இன்றைய இளைஞர்கள் விளையாடுவதற்கு நேரமில்லாமல் பெற்றோலுக்கும் டீசலுக்கும் வரிசையில் நிற்கும் துயரங்களை பார்க்கிறோம். மகிழ்ச்சியாக திரிய வேண்டிய நேரத்தில்  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் வதை அனுபவிப்பதை காண்கிறோம் எமது தமிழ் சமுதாயம். அவர்கள் செய்த பாவம் என்ன? இந்த நாட்டிலே பிறந்தது குற்றமா? 

 தமிழ் இனம் இந்த நாட்டிலே பல நெருக்கடிகளை பல சவால்களை இந்த கண்டு வந்திருக்கிறது. எதையும் தாங்கிய இதயம் படைத்தவர்கள் தமிழர்கள் .
அந்த வகையில் இன்றைய பொருளாதார நெருக்கடி தமிழர்களுக்கு ஒரு சவால் அல்ல . இந்தநெருக்கடி நிலை நாளை மாறலாம் அல்லது அது உச்சக்கட்டத்தை அடையலாம் .எதுவானாலும் .எமக்கு நம்பிக்கை தேவை 


ஒரு காலத்தில் இந்தியாவும் சுதந்திரம் பெறுவதற்காக மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை போராட்டத்தை நடத்தியது. புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. காந்தியின் அகிம்சைப் போராட்டத்துக்கு அப்பால் கால ஒழுங்கினால் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது .

அதன் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது . ஆனால் தமிழர்கள் எமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை.
 நாட்டை விற்று உணவு வழங்க வேண்டிய கேவலமான நிலையில் அரசு இருக்கின்றது. இந்த கடினமான காலத்தை நாம் நம்பிக்கையோடு கடக்க வேண்டும் .

நாம் உச்சகட்ட பொருளாதார நெருக்கடிகளை கடந்த காலங்களில் சந்தித்தவர்கள். நம்பிக்கையோடு பீனிக்ஸ் பறவை போல் நாம் மீண்டும் எழ வேண்டும். இன்றைய பொருளாதார நெருக்கடியை விட எத்தனையோ சவால்களை சந்தித்தது தமிழினம். நிலைமையை சமாளித்து கொண்டு எதையும் தாங்கிக் கொண்டு முன்னேற வேண்டும்..
 மைதானத்தில் அதிக வியர்வை சிந்தி இருந்தாரோ அவர் அன்று  நன்றாக நித்திரை கொள்வார்.

 வடக்குக்கும் கிழக்குக்கும் உறவுப்பாலம் அமைத்தவர் இந்த மண்ணில் பிறந்த தமிழ்ப்பேராசிரியர் விபுலானந்த அடிகள். அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலே கற்பித்தல் போது எனது அப்பாவும் தாத்தாவும் அவரிடம் தமிழ் படித்தவர்கள் . யாழ் மக்கள் தமிழை உச்சரிப்பதற்கும் தமிழை செம்மையாக பேசுவதற்கும் வழி வகுத்தவர் சுவாமி விபுலானந்த அடிகள். அவர் பிறந்த மண்ணிலே நின்று பேசுவதில் பெருமையடைகிறோம். எமது கட்சியின் தளபதி ஆக இருந்த பத்தனின்  நினைவிலே பங்கு கொள்கிறோம் .எமது கட்சியின் கொடியை எமது தலைவர் ஏற்றி இங்கு ஆரம்பித்து வைத்தார் .சந்தோசமாக இருக்கின்றது. தமிழ் மக்களே எதையும் தாங்கும் வல்லமை படைத்தவர்களே இந்த கடினமான காலத்தை கவனமாக கடக்க வேண்டும். என்றார்.