விலை குறைப்பை அமுல்படுத்த மறுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!





 நூருல் ஹுதா உமர்


பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விலைகுறைப்பு அறிவித்தல்கள் இப்படி இருக்க வர்த்தகர்கள், வியாபாரிகள் இன்னும் தமது வர்த்தக நிலையங்களில் விலை குறைக்கவில்லை. ஏற்கனவே கொள்வனவு செய்த பொருட்கள் முடிந்த பின்னர்தான் விலை குறைப்பு நடக்கும் என நுகர்வோருக்கு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் விலை கூட்டப்பட்டு அடுத்த நிமிடமே விலையை கூட்டி விற்பனை செய்த வர்த்தகர்கள் விலையை குறைத்தால் மாத்திரம் இப்படியான நொண்டிச்சாட்டுக்களை தெரிவிக்கின்றனர் என நுகர்வோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தீர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.

அண்மையில் முட்டைக்கான நிர்ணய விலை 43 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் முட்டை 60-65 ரூபாய்க்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே போன்றே விலை கூடிய காலத்தில் பதுக்களில் ஈடுபட்ட வர்த்தகர்கள் விலை குறைந்துள்ள இந்த காலத்திலும் கூடிய விலைக்கு பொருட்களை வாங்கி பதுக்கியிருந்தமையால் இப்போது அத்தியாவசிய பொருட்களை கூடிய விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.