நூருல் ஹுதா உமர்
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி, கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. ஹிபத்துள் கரீம், கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஒழுக்காற்று பிரிவு ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களை ஏற்றிவரும் ஆட்டோக்கள் மற்றும் வேன் சாரதிகளுக்கு என பிரத்தியோகமாக போக்குவரத்து ஒழுங்குகளை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் காலை 7 மணி முதல் காலை 08 மணிவரையும் மாலை 1.30 தொடக்கம் மாலை 2.30 வரையும் கனரக வாகனங்கள் ஸாஹிரா கல்லூரி வீதியை பயன்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலான சமிஞ்ஞை பாதாதைகளை காட்சிப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்விடயத்தில் கல்முனை மாநகர சபையின் வகிபாகம் தொடர்பிலும், வீதிப்பயணிகளின் போக்குவரத்து தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Post a Comment
Post a Comment