திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்து புனித பிரதேச பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டும். காரைதீவு பிரதேச சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்




 


 வி.ரி. சகாதேவராஜா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன .ஆகவே உடனே அதை தடுத்து நிறுத்தி இந்த பிரதேசத்தை புனித   பிரதேசமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இவ்வாறு காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

  சபையின் விசேட அமர்வு இன்று (25) செவ்வாய்க்கிழமை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற போது  ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

 இந்த தீர்மானத்தை சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்மொழிந்து உரையாற்றினார்.

அவர் உரையாற்றுகையில்...

இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும்  திருகோணமலை திருக்கோணேஷ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம்.

அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டும்,
தொல்லியல் திணைக்களத்தினால்  சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்க பட்டுவருவதும் ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடையவைத்திருக்கின்றது.

 தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான்.

 ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டிய அவசியமென்ன?

எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பனவற்றை தடுத்து ஆலய வளாகத்தை சூழ உள்ள பிரதேசங்களை புனித பிரதேசமாக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் . என்றார்.

பிரேரணையை சபை உறுப்பினர். த. மோகனதாஸ் வழிமொழிந்தார் ஏக மனதாக வாக்களித்தவர்கள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , உப தவிசாளர் ஏ.எம்.யாகீர் , எம்.எச்.எம்.இஸ்மாயில், எ.ஆர்.எம்.பஸ்மீர் , ச.நேசராசா , தம்பிராசா மோகனதாஸ், சின்னையா ஜெயராணி, எஸ். சசிகுமார் உணர்வுபூர்வமாக 8 பிரதிநிதிகளும் வாக்களித்தனர்.

பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டது

தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி ,பிரதம மந்திரி தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தவிசாளர் கூறினார்.