அறிவுச்சுடர்" போட்டித்தொடரின் பரிசளிப்பு விழாவும்,கலை நிகழ்ச்சியும்...!





 (எம்.என்.எம்.அப்ராஸ்,எஸ்.அஷ்ரப்கான்,எம்.எம்.ஜபீர் ஏ.எல்.எம்.ஷினாஸ்)


ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனின் அனுசரணையில் அறம் வலையமைப்பு நடாத்திய மாபெரும் "அறிவுச்சுடர்" போட்டித் தொடரின் பரிசளிப்பு விழாவும்,கலை நிகழ்ச்சியும் அந்நிறுவனத்தின் தலைவியும் அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவியும் சட்டத்தரணிமான மர்யம் மன்சூர் நளிமுடீனுடைய தலைமையில் நேற்று (21)சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்  கல்முனை கல்வி வலையத்துக்கு உட்பட்ட எட்டு தேசிய பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட "அறிவுச்சுடர்"போட்டித்தொடரில் புள்ளிகள் அடிப்பைடயில் முன்னிலை வகித்த முதல் மூன்று பாடசாலைகளின் மாணவக்குழுக்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும்,பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை சுற்றுத்தொடரில் பங்குகொண்ட பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

அறிவுச்சுடர் சுற்றுத்தொடரில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியும் (தேசிய பாடசாலை)இரண்டாமிடத்தை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும்(தேசிய பாடசாலை) மூன்றாமிடத்தை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை (தேசிய பாடசாலை)மாணவர்களும் சுவீகரித்துக்கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரிசையில் அறம்  வலையமைப்பின் ஸ்தாபகர் டொக்டர் சிஹாபுடீன் நளிமுடீன்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,கல்முனை கல்வி வலய பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுல்லா,பிரதிக் கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப்,சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன்  தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் சபீனா இம்தியாஸ்,
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு,அல்-ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யு.எல்.நசார்,மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்துக்கு ஏ. ஆர். மன்சூர் பவுண்டேஷனினால் போட்டோ கொப்பி உபகரணம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

"அறிவுச்சுடர்" போட்டித்தொடரை,சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஷ்ரப் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.