முன்பள்ளிகளின் முன்மாதிரி!



 ( காரைதீவு   சகா)

 வெள்ளி விழாக் காணும் விபுலானந்தா மொண்டசோரி பாடசாலை  ஏனைய முன்பள்ளிகளுக்கு முன் மாதிரியாக சிறந்த பாடசாலையாக திகழ்கிறது .

இவ்வாறு காரைதீவு விபுலானந்தா மொண்டசோரி பாடசாலையின் 25வது வருடாந்த விபுலமணிகளின் விடுகை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

 விபுலமணிகளின் விடுகை விழா பாடசாலை பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் காரைதீவு இராமகிருஷ்ண சங்க பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது .

ஆளுமை சார் அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கலந்துகொள்ள, கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன், பொலனறுவை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சிவசுந்தரம் சசிகரன், கல்முனை வலய உதவி கல்வி பணிப்பாளர் ஆனந்தகுமாரசாமி சஞ்சீவன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்லாறு பிராந்திய பொறுப்பதிகாரி பொறியியலாளர் றோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன், காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு உமாசங்கரன் ,ஓய்வு நிலை அதிபர் கணபதி பிள்ளை புண்ணிய நேசன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் அதிதி தொடர்ந்து உரையாற்றுகையில்.. 
எமது பாரம்பரியங்களை கலாச்சாரங்களை இளம் சந்ததிக்கு நாங்கள் எடுத்து கூற வேண்டும் . முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணில் அவரது நாமத்தோடு இயங்கும் இப்பாடசாலை சிறப்பாக இயங்கி வருவது பாராட்டுக்குரியது என்றார்.

விபுலானந்தாவில் பயின்று கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த 17 மாணவர்கள் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். 

ஏனைய விடுகை பெறும் பயிலும் மாணவர்களும் அங்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டார்கள்.

 ஆசிரியர்களான ஜெயநிலந்தினி, ரம்யா ஆகியோர் பெற்றோரால் கௌரவிக்கப்பட்டார்கள். பிள்ளைகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.