இலவசமாக அரிசி வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு





நூருல் ஹுதா உமர்)


2022/23 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று காரைதீவு பிரதேச செயலக மாவடிப்பள்ளி கிழக்கு கிராம பிரிவில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.

சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பிரதேச செயலாளரின் உரையினைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20 கிலோ அரிசி பக்கற்றுக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இராஜகுலேந்திரன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம் எம் அச்சிமுகமட், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அலியார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் நலன் விரும்பிகளும் பயணாளிகளும் கலந்து கொண்டனர்.

இவ் அரிசி விநியோகமானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இரண்டு கட்டங்களாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேசத்தில் உள்ள 17 கிராம பிரிவுகளைச் சேர்ந்த குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் இதில் நன்மையடையவுள்ளனர். அவர்களுக்கான அரிசி விநியோகமானது எதிர்வரும் நாட்களில் தத்தம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காரியாலயங்களில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது