பல்கலை மாணவியின் மரணம் - அறிக்கை சமர்ப்பிக்க!




 


டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.


டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் மாவிட்டபுரம் சாயோடையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நேற்று(25) நடைபெற்றன.


யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் 25 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


காய்ச்சலினால் கடந்த 19 ஆம் திகதி யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, கடந்த 22 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அதனையடுத்து, கடந்த 23 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மாணவி உயிரிழந்ததாக யாழ்.போதனா வைத்தியசாலையின் ​பேச்சாளரொருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.


இதனிடையே, வாந்தியைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையே உயிரிழப்பிற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக இது தொடர்பில் வினவிய போது அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்