பொத்துவிலில் மதுபானசாலை அமைக்க எதிர்ப்பு





 நூருல் ஹுதா உமர்


முஸ்லிங்களை பெரும்பான்மையாக கொண்ட பொத்துவில் 11, வட்டிவெளி பிரதான வீதியில் (பொத்துவில் பொலிஸ் நிலையம் அருகில்) வர்த்தகர் ஒருவரினால் அமைக்கப்படவிருந்த மதுபானசாலையை தடுத்து நிறுத்துமாறு பொத்துவில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு இந்த மதுபானசாலையை நிறுவுவதை தடுக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கடந்த செப்டம்பர் 19 அன்று நிதி இராஜாங்க அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மக்களின் எதிர்ப்பையும், குறித்த மதுபானசாலை அமைந்தால் உருவாக உள்ள பிரச்சினைகளையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

மேலும் நிதி இராஜாங்க அமைச்சர் இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு குறித்த மதுபானசாலைக்கு மக்களின் எதிர்ப்பு உள்ள விடயத்தை சுட்டிக்காட்டி அனுமதி வழங்கும் விடயத்தை மீள் பரிசீலிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு முன்வைத்த  மதுபானசாலை அனுமதிப்பத்திரம் சம்பந்தமான எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதி தற்காலியமாக நிறுத்தப்பட்டு இது தொடர்பிலான விளக்கங்களை (நேரடி வாக்கு மூலம்) வழங்க பொத்துவில் பிரதேச செயலகம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை எதிர்வரும் 2023.12.05 ம் திகதி பிரதேச செயலகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.