கல்முனை அனர்த்த முகாமைத்துவ சபை ஸ்தாபிப்பு !




 


நூருல் ஹுதா உமர்


அனர்த்தங்கள்  மற்றும் அசாதாரண நிலைமைகள் போது பொதுமக்களுக்கு  உதவும் நோக்கில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் 2024.01.14 ந் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உலமாக்கள், அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் அனர்த்த முகாமைத்துவ சபை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சபைக்கு தலைவராக கல்முனை முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் என்.எம். நௌஸாத் அவர்களும் பொருளாளராக இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாத் அவர்களும் கல்முனை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜெலீல் பாகவி மற்றும் கல்முனை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி அஷ்செய்க் முர்ஷித் முப்தி ஆகியோர் உதவி தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் உப செயலாளராக ஓய்வு நிலை மலேரியா தடுப்பு அதிகாரி எம்.ஐ.எம். சலாஹுத்தீன் அவர்களும் கணக்குப் பரிசோதகராக இலங்கை வங்கி முகாமையாளர் ஏ.எம்.எம். முஸ்த்தக்கீன் மௌலானாவும் நிருவாக சபையின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்த கூட்டத்தின் தீர்மானங்களாக அனர்த்த முகாமைத்துவ சபைக்கு தனியான நிதியத்தை உருவாக்கி அதனை தொடர்ந்து செயற்படுத்துதல், முதல் கட்டமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் தரவுகளை பிரதேச செயலதத்தினூடாகப் பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு உலர்உணவு வழங்குதல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.