அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள் நிகழ்வுகள்






வி.சுகிர்தகுமார் 0777113659  


 தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால அரச கரும மொழித்தேர்ச்சி பயிற்சி வகுப்புக்களின் இறுதிநாள் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று (03)இடம்பெற்றது.
பொது நிர்வாக சுற்று நிருபத்திற்கமைவாக அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய அரசகரும மொழித்தேர்ச்சி தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி வகுப்புக்கள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களின் இறுதிநாள் கலை நிகழ்வுகளும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இருமொழி வளவாளர்களான  திருமதி சரோஜா தெய்வநாயகம், சந்துணி மகேசிகா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கணக்காளர் பிரகஷ்பதி கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பயிற்சி நெறியினை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
இதேநேரம் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களின் சேவையினை பாராட்டும் வகையில் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் மொழி அறிவு அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமன்றி அனைவருக்கும் தேவையானதொன்றெனவும் மொழியாற்றல் உள்ளவர்கள் உலகில் பல விடயங்களை சாதிக்க முடியும் எனவும் கூறினார்.
ஆகவே அரச உத்தியோகத்தர்களுக்கு அரசும்  தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகமும் வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.