சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு




 


சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (16) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் இம்முன்பள்ளி, தமது 10 ஆண்டு நிறைவையொட்டி வெளியிடும் புதிய சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டைகள் LKG, UKG ஆகிய பிரிவுகளில் கல்வி பயிலும் 183 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தாய் சேய் நலன் பேணல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் கௌரவ அதிதியாவும் கலந்து கொண்டார்.


சாய்ந்தமருது மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.ஆர்.றிஸ்வான் முகம்மட், கல்முனை பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ஆயிஷா மற்றும் கல்முனை மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் கணக்காளர் எஸ்.லியாக்கத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இதன்போது, "சிறுவர் உளவியல்" எனும் தலைப்பில் டொக்டர் ஐ.எல். எம்.றிபாஸ் மற்றும் "சிறுவர் போசாக்கு" தலைப்பில் டொக்டர் எம்.எச். றிஸ்பின், "முன்பள்ளி கல்வியில் பெற்றோரின் வகிபாகம்" தலைப்பில் ஏ.எம்.ஆயிஷா, "சேமிப்பின் முக்கியத்துவம்" தலைப்பில் ஏ.ஆர். றிஸ்வான் முகம்மட் ஆகியோரால் பெற்றோருக்கான விழிப்புணர்வு உரைகள் இடம்பெற்றது.