கிராமத்தில் யானையின் தாக்குதல்




 வி.சுகிர்தகுமார்  

 ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னப்பனங்காடு கிராமத்தில் யானையின் தாக்குதலால் தென்னங்கன்றுகள் பல சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (03) இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த கிராமம் மாத்திரமன்றி அயல் கிராமங்களும் நாளாந்தம் யானையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது.
மிகுந்த சிரமத்தியின் மத்தியில் பராமரிக்கப்பட்டுவரும் தென்னங்கன்றுகள் நாளாந்தம் சேதமாக்கப்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளதுடன் தங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகின்றனர்.
யானைகள் அருகில் உள்ள களப்பில் பகல் வேளையில் இருப்பதுடன் இரவு வேளைகளில் கிராமங்களுக்குள் நுழைந்து மக்களது உடமைகளையும் அவ்வப்போது அழித்து வருகின்றது.
இதேநேரம் நிம்மதியாக வீடுகளில் தூங்கி பல மாதங்கள் ஆகின்றது. வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர இனி வேறு வழியில்லை என்கின்றனர் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகிகிராமம் கவாடப்பிட்டி புளியம்பத்தை மகாசக்தி கிராமம் சின்னப்பனங்காடு உள்ளிட்ட கிராமங்களில் வாழும் மக்கள்.
இதேநேரம் அன்மைக்காலமாக கவடாப்பிட்டி புளியம்பத்தை மகாசக்திபுரம் கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருவதானால் அங்கு வாழும் மக்கள் தூக்கத்தை தொலைத்து வீதிகளில் அலைவதுடன் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
மேலும் யானை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அரசாங்கமோ எந்த அரசியல்வாதிகளோ இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ந்தும் யானையின் அச்சுறுத்தல் இடம்பெறுவதாக பொதுமக்களும் கூறுகின்றனர்.
ஆகவே குறித்த யானையினை வெளியேற்ற அரசாங்கமும் அரச அதிகாரிகளும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இல்லாத பட்சத்தில் தாங்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராடத்தில் ஈடுபட வேண்டிய நிலைவரும் எனவும் தெரிவித்தனர்.