சட்டத்தரணி ஒருவர், அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்



 


வழக்கு பதிவேட்டின் பக்கங்களைக் கிழித்த சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

SC Rule No. 16/2023


Decided on 06.08.2025


"Respondent Attorney-at-Law has been found guilty of an act of deceit which is also a malpractice, acting in terms of Section 42 of the Judicature Act,

the Respondent Attorney-at-Law... be removed from office as an Attorney-at-Law"

2023ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவறையில் வழக்கு பதிவேட்டின் இரண்டு பக்கங்களை கிழித்த சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன, ஏமாற்றும் நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக, உயர் நீதிமன்றத்தால் சட்டத்தரணிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாமின் ஏனைய நீதியசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.


குறித்த சட்டத்தரணியின் செயல்கள் நாட்டின் சட்டத் துறையின் மதிப்பை சேதப்படுத்தியுள்ளதாகவும், அவர் நீதித்துறைச் சட்டத்தின் சில பிரிவுகளையும் உயர்நீதிமன்ற விதிகள் 60 மற்றும் 61ஐ (சட்டத்தரணிகளுக்கான நடத்தை மற்றும் ஒழுக்கம்) மீறியுள்ளதாகவும் பிரதம நீதியரசர் தமது தீர்ப்பில் அறிவித்தார்.


அத்துடன்,குறித்த பதிவேட்டை பார்வையிட அனுமதி பெறும் போதே அவர் பொய்யான பெயரொன்றை வழங்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதிவாதியை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறும், அந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டார்.