அக்கரைப்பற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் செயலணி முன்னேற்ற ஆய்வு கூட்டம்



அக்கரைப்பற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் செயலணி முன்னேற்ற ஆய்வு கூட்டம்

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று மாநகர பிரதேசத்தில் வீதிகளில் வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் செயலணியின் செயற்திட்ட முன்னேற்றங்களை ஆய்வு செய்யும் விசேட கூட்டம், 26.02.2026 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு முதல்வரின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இடம்பெற்றது. செயலணி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை விரைந்து நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்; பாடசாலைகள் அமைந்துள்ள எல்லைப் பகுதிகளில், பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் கலையும் நேரங்களில் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் உட் செல்லாமல் தடுக்கும் வகையில் சாலை தடுப்புகள் (Road Barriers) அமைத்தல், மாநகர சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பராமரிப்பில் உள்ள வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதித்தல். மேலும், உள்ளக வீதிகளில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகத்தை குறிப்பிடும் விளம்பரப் பலகைகள் நிறுவுதல்.

நாற்சந்திகள், பெரிய வளைவுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்துதல், விபத்துகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பொருத்தமான இடங்களில் நிறுவுதல், போக்குவரத்து ஒழுங்கு தொடர்பாக ஜும்ஆ பிரசங்கங்கள், ஒலிபெருக்கி மூலம் வீதி பிரச்சாரங்கள், பாடசாலை மற்றும் மதரஸா மாணவர்களுக்கு காலைக்கூட்டம் மற்றும் வகுப்பறைகளில் விழிப்புணர்வு அறிவுரை வழங்குதல். மேலும் பத்திரிகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தல்.

இந்த நடவடிக்கைகள் மூலம் அக்கரைப்பற்று மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வீதி  பாதுகாப்பு நிலையை மேம்படுத்த முடியும் என முதல்வர் தெரிவித்தார். செயலணி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விரைவான செயல்பாட்டை உறுதி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564