ஏறாவூரில் புதிய பொதுச் சந்தை திறப்பு: வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பு



 


நூருல் ஹுதா உமர்


ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், புதிய பொதுச் சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

மேலும், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். அப்துல் வாசித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய பொதுச் சந்தை வளாகம், ஏறாவூர் பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான கட்டமைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.