திடீர் சோதனை




 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில்  பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு  தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.


கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதிகாரிகளினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போது இரவு நேர உணவகங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  தரமற்ற உணவுகள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன்  10 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
 
குறித்த பரிசோதனை யாவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ,சம்மாந்துறை ,கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது சுமார் 42 உணவகங்கள் மற்றும் 'டேஸ்ட்' கடைகள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.